tamilnadu

குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

தேனி , ஏப். 14-போடியில், குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கோவில் வளாகத்தில் குழந்தை இறந்து போனது. போடி சோலை சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (30). இவருக்கும் பல்லவராஜன் என்பவருக்கும் சில வருடம் முன் திருமணமாகி ஒன்றேகால் வயதில் தர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. பிரியங்காவின் கணவர் பல்லவராஜன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இருவரும் சிங்கப்பூரில் இருந்தபோது இருவருக்குள்ளும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து போடியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதில் பிரியங்கா மீது பல்லவராஜன் விவாகரத்து வேண்டியும், பல்லவராஜன் மீது பிரியங்கா சேர்ந்து வாழக்கோரியும் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பிரியங்கா தனது குழந்தையுடன் போடி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்துள்ளார்.அப்போது குழந்தை கீழே உருண்டு விழுந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் பார்த்தபோது பிரியங்காவும் மயங்கி விழுந்துள்ளார். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் குழந்தை தர்ஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரியங்கா உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.விசாரணையில் பிரியங்கா தனது குழந்தைக்கு குளிர் பானத்தில் விஷ மருந்தை கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

;