தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க நோக்கில் கொண்டுவரப்பட்ட வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் அமலானது.
கேரளாவில் அமலில் இருக்கும், பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டத்தை தமிழ்நாடு அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிகளில் பாட வேளைகளுக்கு இடையில் 3 முறை மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு நேரம் வழங்க வேண்டும். மாணவர்கள் தண்ணீர் குடிக்க வகுப்பிற்கு வெளியே செல்லக்கூடாது. வகுப்பிலேயே 2-3 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
வாட்டர் பெல், காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணி என பள்ளிகளின் வசதிக்கு ஏற்ப இருக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த நிலையில், வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் அமலானது. இத்திட்டத்தின் கீழ் சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11 மணிக்கு வாட்டர் பெல் அடித்த உடன் மாணவர்கள் ஆர்வமுடன் வகுப்பறையில் அமர்ந்து தண்ணீர் அருந்தினர்.