states

img

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு - பணிந்தது மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தியை திணிக்கும் முடிவை கடும் எதிர்ப்புக்கு பிறகு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் உள்ள அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை இந்தியை மூன்றாவது மொழியாக கற்றுக்கொடுக்கப்படும் என்று அம்மாநில பாஜக அரசு அறிவித்திருந்தது. மேலும், இந்த நடைமுறை இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் என்று அரசாணை பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்தியை திணிப்பதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தித் திணிப்பிற்கு எதிராக ஜூலை 6-ஆம் தேதி கிர்காம் சௌபாட்டியிலிருந்து தொடங்கி தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் வரை மிகப் பெரிய பேரணியை நடத்தவுள்ளதாக மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்திருந்தார். இப்பேரணியில் பங்கேற்க உத்தவ் தாக்கரே உட்பட அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தியை திணிக்கும் முடிவை அம்மாநில பாஜக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"மூன்றாம் மொழியாக இந்தியை திணிக்கும் முடிவு ரத்து! மீண்டும் பணிந்தது மராட்டிய அரசு!
இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றிபெறாது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.