ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் முகமது பகேரி, ஈரானிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி, அணுசக்தி விஞ்ஞானிகள் ஃபெரிடவுன் அப்பாசி தவானி மற்றும் முகமது மெஹ்தி தெஹ்ராஞ்சி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவததை அடுத்து ஈரானின் வான்வழி மூடப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈராநிய புரட்சிகர காவல்படை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இன்று (13-06-2025) எண்ணெய் விலைகள் 9%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தற்போது எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.