world

img

2022-இல் மட்டும் 29 நாடுகளில் 115 பத்திரிகையாளர்கள் கொலை: அதிர்ச்சி தரும் அறிக்கை

2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 29 நாடுகளில் 115 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரஸ் எம்ப்ளம் பிரச்சாரம் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிரஸ் எம்ப்ளம் பிரசாரம்(பிஇசி) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

1992 முதல் 1999 வரை முன்னாள் யூகோஸ்லாவியாவில் நடந்த போர்களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பில் ஐரோப்பா மிக மோசமான உள்ளதாக எம்ப்ளம் அறிக்கை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 24 அன்று ரஷிய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 34 பேர் கொல்லப்பட்டனர். இதில், எட்டு பத்திரிகையாளர்கள் பணியில் இருக்கும்போது கொல்லப்பட்டனர்.

மெக்ஸிகோவில் 17 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நாட்டில் அதிக இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

மேலும், ஹோண்டுராஸ், இஸ்ரேல்,பாலஸ்தீனம் மற்றும் ஏமன் ஆகிய மூன்று நாடுகளில் தலா மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளது.

பிரேசில், சாட், ஈக்வடார், மியான்மர், சோமாலியா, சிரியா மற்றும் அமெரிக்காவில் தலா இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சிலி, காங்கோ ஜனநாயக குடியரசு, குவாத்தமாலா, கஜகஸ்தான், கென்யா, பராகுவே, ரஷியா, ஸ்வீடன், துருக்கி மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளர்கள் இந்தாண்டு யாரும் இறக்கவில்லை. கடந்த 2021-இல் பலி எண்ணிக்கை 12-ஆக இருந்தது. எனினும் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை கடந்தாண்டோடு ஒப்பிடும்போது 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உக்ரைனில் நடந்த போரின் காரணமாக அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பிரஸ் எம்ப்ளம் தலைவர் பிளைஸ் லெம்பன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளில், ஆப்கானிஸ்தான்(44), இந்தியா(37), உக்ரைன்(36), பாகிஸ்தான்(34), சிரியா(24), பிலிப்பைன்ஸ் (21) ஆகிய நாடுகளை விட மெக்சிகோ அதிக எண்ணிக்கையாக (69) பதிவு செய்துள்ளது.ஏமன் (17), ஹோண்டுரஸ்(13), சோமாலியா(13), பிரேசில்(12) மற்றும் ஹைட்டி(11) எனப் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. அறிக்கையின் படி, 2013 முதல் 2022 வரை 1,135 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.