tamilnadu

img

சில்லரை வணிகத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து திருச்சியில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

சில்லரை வணிகத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து திருச்சியில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக. 30-  இந்தியாவில், சில்லரை வணிகத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டத்திற்கு மாற்றாக சுயதொழில் என்ற அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சில்லரை வணிகம் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றது. மேலும் சிறு, குறு நடுத்தர வணிகர்களின் வருவாய் ஆதாரமாகவும், வாழ்வாதாரமாகவும் சில்லரை வணிகம் விளங்கி வருகிறது. இந்த நிலையில், அண்மைக்காலமாக அகில இந்திய அளவில் பெருகி வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான அறிவிப்புகள், ஏராளமான சலுகைகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, சில்லரை வணிகத்தை கபளீகரம் செய்து வருகின்றன. இதனால், சிறு-குறு நடுத்தர வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஏராளமானோர் தங்கள் வணிகத்தை இழந்து மாற்று வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.  இதில், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திருச்சியில் ஏற்கனவே 2 இடங்களில் மிகப்பெரிய அளவில் இயங்கி வருகிறது. தற்போது, இதே திருச்சியில் 3 ஆவது கிளையை 1,50,000 சதுர அடி பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்க ஆயத்தமாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏறத்தாழ 30 லட்சம் சில்லரை வணிகர்கள் சிற்றூர் முதல் நகரம் வரை பரந்து விரிந்து சுமார் 1 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய வணிக குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர்.  எனவே சில்லரை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் நடத்துவது என பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  அதன்படி  சனிக்கிழமை திருச்சியில் கார்ப்பரேட் நிறுவனத்தின் 3 ஆவது கிளை அமைய உள்ள வயலூர் ரோடு, வாஸன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் மாபெரும் அடையாள முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். மாநில தலைமை நிலையச் செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். இந்தப் போராட்டத்தில் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவருமான கந்தன், மாநில பொதுச் செயலாளர் அன்பழகன், மாநிலப் பொருளாளர் அம்பாள் ஸ்ரீ ராம் குமார், மாநிலத் துணைத் தலைவர்கள் கே.எம்.எஸ். ஹக்கீம், ரங்கநாதன், மாநில இணைச் செயலாளர்கள் எம்.கே. கமலக்கண்ணன், ராஜாங்கம், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் உட்பட மாநிலம் முழுவதிலுமிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கதுல்லா நன்றி கூறினார்