சென்னை, ஜன.5- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டை யொட்டி நடைபெற்ற சாதி மறுப்பாளர்கள் சங்கமத்தில் அய்யா வழி சமய தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் பேசுகையில், சாதி இருக்கிறது என்று கூறப்படுகிறதே தவிர அது எப்படி கட்டமைக்கப்பட்டது என்று யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை. இந்த நாட்டில் மட்டும்தான் அதர்மத்தை தர்மம் என்று பேசும் நிலை என்றால் எவ்வளவு பெரிய மடமை நம்மை கோலோச்சுகிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே அதை உதாசீனப்படுத்தவேண்டும்.
இடைவெளியை எதிர்த்து போராட்டம்
அடிமைப்பட்டு இடுப்பிலே துண்டு கட்டியவர்கள் எல்லோரையும் தலையிலே துண்டை கட்டச் சொன்னார் அய்யா வைகுண்டசாமி. ஆணும் பெண்ணும் வழிபடலாம் என்று கூறியவர். ஏதும் அறியாதவர்கள் இன்று ஆன்மீகம் பேசி அலை கின்றனர். சித்தர்கள் அனைவரும் சாதி இல்லை என்றே கூறினார்கள். நம்பூதிரிக்கும் நாடாருக்கும் 12 அடி இடைவெளி. நம்பூதிரிக்கும் தலித்துக்கும் 90 அடி இடைவெளி என்ற சட்டம் திருவிதாங்கூரில் இருந்தது. அந்த சட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம் நடைபெற்றது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், வள்ளலார், வைகுண்டர், பெரியார் எண்ணற்றவர்கள் வழிகாட்டிய பிறகும் இன்னும் சாதி மட்டுப்படவில்லை. உழைத்து பிழைப்போர் தான் இந்த மண்ணில் உயர்ந்த சாதி.
கருவறைக்குள் தமிழ்
கோவில் கருவறைக்குள்ளே தமிழ் செல்ல வேண்டும். நமக்கெல்லாம் வடமொழி தெரியாது என்ப தால் பூஜை செய்ய அருகதை இல்லை என ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பெண்களை தீண்டத்தகாத வர்களாகினார்கள். வரும் 20ஆம் தேதி தோள் சீலை போராட்டத்தின் 200ஆவது ஆண்டு விழாவை சாதி யத்தை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்த மண்ணிலே கொண்டாட இருக்கிறோம். இதில் பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இறைவனே இடதுசாரிதான்
ஆன்மிகவாதி எப்படி அரசியல் பேசலாம் என சிலர் கேட்கிறார்கள்.என்ன அநியாயம்? நல்லவர்கள் அரசியல் பேசக் கூடாதா? எல்லோரையும் சமமாக நடத்தக் கூடிய அரசியல் குறித்து பேசக் கூடாதா? சாதியை பேசுகிறவர்களுக்கா அரசியல் சொந்தம்? இல்லை, இல்லை, நீதியை கேட்பவர்களுக்குதான் அரசியல் சொந்தமாக வேண்டும். இறைவன் இடது சாரி என்று கூறுவேன். ஈசன் தனது இடது பக்கத்தை பார்வதிக்கு கொடுத்தார். இடதுபுறம்தான் இதயம் உள்ளது. இடதுதான் உயிர்த் துடிப்புடையது, உயர்ந்தது என்றார்.
பெரியார் கொள்கைகளுக்கு இறப்பு இல்லை
பெரியார் இறந்து விட்டார் என நினைக்காதீர்கள். அவரின் கொள்கைகளை தூக்கிப் பிடிக்க நாங்கள் எல்லாம் இருக்கிறோம். தெற்கில் இருந்து தென்றல் புறப்படும். ஆனால் வடக்கில் இருந்து வாடையாக வரும். வடக்கில் இருந்து வருவதை நம்பாதீர்கள். வர லாறு அறியாதவர்கள் வரலாறு படைக்க முடியாது. சரித்திரத்தை சிலர் சிதைக்கத் துடிக்கிறார்கள். எனவே வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். தொட்டால் தீட்டு, கண்டால் தீட்டு என்பதை யெல்லாம் வெற்றிகண்டவர்கள் நாம். கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறையை கொண்டுவர வேண்டும்.
செங்கொடி
நாடு முழுவதும் சாதியற்ற சமூகம் அமைய ஒன்றி ணைந்து போராடுவோம். சிவப்பு மட்டும் தான் சமமானது. சமயம் சார்ந்த, ஆன்மீக, அன்புக் கொடி சிவப்பு கொடிதான். சமத்துவத்தை போதிக்கும் கொடி செங்கொடி. அது ஓங்கி பறக்கும் காலம் வரும் போதுதான் சாதி ஒழியும், சமதர்ம சமுதாயம் அமையும். அதை நோக்கிய பயணத்தை முன்னெடுப்போம் என்று கேட்டுக் கொண்டார்.