புதுதில்லி:
இணையதளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் அனைத்தையும் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதற்கானஅரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. இதனால் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதால் ஓடிடிதளங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், ஓடிடி இயங்கு தளங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள் ஆகியவை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பித்துள்ளது.
தற்போது, ஓடிடி தளங்களுக்கான கொள்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரத்தை அமைச்சகம் பெறுவதாகவும், இந்த புதிய நடவடிக்கை குறித்து ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொது நல வழக்கு ஒன்றில், டிஜிட்டல் தளங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை; அதை ஒழுங்குபடுத்துதல் அவசியம் என சமீபத்தில் மத்தியஅரசு தெரிவித்திருந்தது.