tamilnadu

img

பொறியியல் படிப்பில் சேரும் முன் கவனிக்க வேண்டியவை அண்ணா பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

சென்னை, மே 17- பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கடை பிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தல்களை வழங்கி யுள்ளார். தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்ட நிலையில், மாணவர்கள் உயர் கல்விக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வரு கின்றனர். குறிப்பாக பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நடைமுறைகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி, “பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை சரிபார்க்க வேண்டும். 80 விழுக்காடு கல்லூரிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.  அதேநேரம் 40 விழுக்காடு கல்லூரிகளில் தான் போதிய அளவு ஆசிரியர்கள் உள்ளனர். அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுகிறது. அறிவு பரிமாற்றம் நடைபெறுகிறது. எனவே நல்ல ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேரக் கூடாது. பொறியியல் படிப்புகளை படிக்க கணிதத்தில் சிறந்த அறிவு அவசியம்.

எனவே 12 ஆம் வகுப்பில் கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்வதை விட பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் சேரலாம். கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம்.  குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் பி.எஸ்.சி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர்வது சிறந்தது. இந்தப் படிப்புகளுக்கு கணிதம் பெரிதாக தேவையில்லை. எனவே கணிதத்தில் குறைந்தது 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்வது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.