tamilnadu

img

உயர் அதிகாரி கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா? – உயர்நீதிமன்றம்    

உயர் அதிகாரி கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா?,' என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியதுடன் மனுவைத் தள்ளுபடி செய்தது.  

சென்னை – கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வராக இருந்த பழனிசாமிக்கு, சட்ட ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., பாதுகாப்பு பணியில் இருந்தார். முதல்வரின் சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.பி. புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி கண்ணன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில்,  சிறப்பு டிஜிபியாக இருந்த போது, அவரின் அறிவுறுத்தலின்படியே நான் செயல்பட்டேன். எனவே பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை வழக்கிலிருந்து தன்னை விடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கூறுகையில், ‛உயர் அதிகாரி கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா? பெண் அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளே குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும்?,' எனக் கூறினார்.

இதனையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக எஸ்.பி கண்ணன் தரப்பு கூறியதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

;