tamilnadu

img

தேர்தல் ஆணையத்திற்குப் பல் இல்லையா?

திரிலோசன் சாஸ்திரி, ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தலைவரும், பெங்களூரு இந்திய மேலாண்மை இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் முதல்வருமாவார். இவர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேசியைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களது கலந்துரையாடலின் சாராம்சங்களில் சிலவற்றைக் கீழே தந்திருக்கிறோம்.


திரிலோசன் சாஸ்திரி: மிஸ்டர் குரேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியமைக்காக சமீபத்தில் தேர்தல் ஆணையம் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதன்மூலம், தன்னால் கடித்துக் குதறமுடியும் என்று காட்டிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


எஸ்.ஒய். குரேசி: தேர்தல் ஆணையத்திற்கு, அதற்குள்ள அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் நினைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்பது உண்மையிலேயே பரிதாபகரமான விஷயமாகும்.தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததனால் தேர்தல் ஆணையத்தை பல்லில்லாத ஒன்று என்று கூறுவதும் தவறாகும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது, அதிலும்குறிப்பாக ஆளும் கட்சியினர் அவ்வாறு மீறும்போது, அது நடவடிக்கை எடுப்பதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக நெஞ்சுறுதி (றடைட யீடிறநச) இருந்திருக்க வேண்டும்தான். ஏனெனில் ஆளும் கட்சிக்கு எப்போதுமே கொஞ்சம் அனுகூலம் உண்டு. அதனை தேர்தல் ஆணையம் தன் நடவடிக்கைகள் மூலமாகமட்டுப்படுத்தி, அவர்களையும் நடுநிலையாளர்களாக மாற்றி இருக்க வேண்டும். இதற்கு, தேர்தல் ஆணையத்திற்குப் போதுமான அளவிற்குப் பற்கள் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். பிரதமருக்குச்சற்று பணிவுடன் அறிவுரை சொல்லியிருந்தாலேகூட, பிரதமர் தனக்குள்ள அதிகாரவரம்பெல்லையை மீறாது இருக்கச் செய்வதற்கு, போதுமானதாக இருந்திருக்கும். அரசியல் தலைவர்களுக்கு அறிவுரை கூறுபவர்களின் அதிகாரம் குறித்துக் குறைத்து மதிப்பிடுவதும் தவறாகும்.


திரிலோசன் சாஸ்திரி: ஆனாலும், தேர்தல் ஆணையம் உண்மையில் நடவடிக்கை எடுப்பதற்கு வெகுநீண்ட காலம் எடுத்துக்கொண்டிருக்கிறதே. தேர்தல் ஆணையம், அரசாங்கத்துடன் சமரசமாகிப்போய் விட்டது என்று நம்புவதற்கான காரணமாக இதை எடுத்துக் கொள்ளலாமா?


எஸ்.ஒய். குரேசி: இந்த அளவிற்குக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை நான் உபயோகப் படுத்தமாட்டேன். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும்எப்போதும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதேயாகும். அது நியாயமாகவும் நேர்மையாகவும் இருந்தால் மட்டும் போதாது. அவ்வாறு இருப்பது போன்ற தோற்றத்தையும் அது அனைவருக்கும் அளித்திட வேண்டும். தற்போது அது தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்களை, சற்றே தன் முஷ்டியால் தட்டி இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதுவரை இருந்ததைவிட இப்போது மேலும் சற்றுக் கூடுத லான துணிச்சலுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.


திரிலோசன் சாஸ்திரி: பிரதமருக்கு எதிராக நட வடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நேரம் எடுத்துக்கொண்டிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


எஸ்.ஒய்.குரேசி: அரசியல்வாதிகளின் நடத்தை குறித்து விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் தேர்தல் ஆணையத்தின் நடத்தை குறித்து விவாதிப்பதுமிகவும் துரதிர்ஷ்டவசமேயாகும். தேர்தல் ஆணைய மும் இதற்கு ஒருவிதத்தில் பொறுப்பாகும். ஏனெனில்நடவடிக்கை எடுப்பதற்கு அது எடுத்துக்கொண்டுள்ள தாமதமே காரணமாகும். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திருக்குமாயின், தேர்தல் ஆணையம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.


திரிலோசன் சாஸ்திரி: அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு யார் தேர்தல்நிதிப் பத்திரங்களைஅளித்தது, எவ்வளவு தொகைக்கு அளித்தார்கள் என்கிற விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு குறித்து உங்கள் கருத்து என்ன? முன்பொருமுறை ஒரு விவாதத்தின்போது நீங்கள் தேர்தல்நிதிப் பத்திரங்கள் குறித்து கடும் விமர்சனங்களை முன்மொழிந்திருந்தீர்கள்!


எஸ்.ஒய்.குரேசி: உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஒரு விதத்தில் ஏமாற்றத்தையும், மற்றொரு விதத்தில் மகிழ்ச்சியையும் அளித்தது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று விமர்சனம் செய்திருப்பது மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், அதனை மூடிமுத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அளித்திட வேண்டும் என்று உத்தரவிட்டது ஏன் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது நியாயமே கிடையாது. அது என்ன அரசு ரகசியமா? தேர்தல் நிதிப் பத்திரங்களைப் பெற்ற கட்சிகளுக்கு அவற்றை யார் கொடுத்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரியும்.  அதேபோன்று நன்கொடை அளிப்பவருக்கும், தான் யாருக்கு அளிக்கிறோம் என்பதும் நன்குதெரியும். உங்களுக்கும் எனக்கும்தான் அது தெரியாது. மற்றொரு வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், தேர்தல்களுக்கான நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கும்போது, நம் அரசமைப்புச் சட்டம் எவ்விதமான நீதிமன்றத்தின் தலையீட்டையும் அனுமதித்திடவில்லை. இவ்வாறு நீதிமன்றம் திரும்பத்திரும்ப தலையிடுவதும்கூட ஒரு வருந்தத் தக்க விஷயமேயாகும்.


திரிலோசன் சாஸ்திரி:  தேர்தல் ஆணையத்திற்கு இருவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று நடைமுறை குறித்தது. மற்றொன்று தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என்பது குறித்தது. நடைமுறை குறித்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டுமா என்பதன் மீது நான் எவ்விதமான கருத்தையும் கூற விரும்பவில்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது என்றுவருகிறபோது, வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வேறு விஷயம். தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த தகவல்களை, மூடி முத்திரையிட்ட உறையில் அளித்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதில் நாம் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது. இதைவிட கூடுதலாக ஏதேனும் பரிந்துரைத்திருக்கலாம். தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால் அதில் தலையிட வேண்டாம் என்று ஒருவேளை நீதிமன்றம் கருதியிருக்கலாம். எனவே அது இரு தரப்பாரையும் திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சமரசமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. மே 30 அன்று என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்போம். ஆனால் உலகம் முழுதும் உள்ள மிகச்சிறந்த நடைமுறை என்னவென்றால், முழுமையான வெளிப்படைத்தன்மைதான்.


திரிலோசன் சாஸ்திரி: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதில் தேர்தல் ஆணையம் சில உள்ளார்ந்த கட்டமைப்புப் பிரச்சனைகளை (iinherent structural problems) எதிர்கொண்டதா?  


எஸ்.ஒய். குரேசி: தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரிகளை நியமனம் செய்யும்முறையை மேம்படுத்திட வேண்டும். தேர்தல் ஆணைய அதிகாரிகளின் இடங்கள் காலியாகும்போது, அந்த சமயத்தில் இருக்கின்ற ஆளும் கட்சிதான் அவர்களை நியமித்திடும் என்ற நிலை இருக்கிறது. அப்படி நியமிக்கும்போது இவர் தங்களுக்குக் கடமைப்பட்டவராக இருப்பாரா என்று அப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் பரிசீலிக்கலாம். எனவே இதற்குப் பதிலாக, உச்சநீதிமன்றத்தில் இருப்பதைப்போன்று கொலிஜியம் முறை பரிசீலனை செய்யப்பட வேண்டும்.


திரிலோசன் சாஸ்திரி: உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறையே பிரச்சனைகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் நீங்கள் அங்கே மேற்கொள்ளப்படுவதுபோல கொலிஜியம் முறை சிறந்தது என்று கூறுவது போல் தோன்றுகிறதே!


எஸ்.ஒய். குரேசி: ஆம். பிரச்சனைகள் இருக்கலாம். எனினும், இருக்கக்கூடியதில் அதுதான் மிகச்சிறந்த முறை. உலகில் எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும், இத்தகைய அரசமைப்பு நியமனங்கள் ஒன்று கொலிஜியம் அமைப்பு முறையில் இருக்கும், அல்லது நாடாளுமன்றக் குழுக்களால் நியமனம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் அமைந்திருக்கும். சில சமயங்களில், நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக பார்க்கக்கூடிய விதத்தில் நேரலை ஒளிபரப்புடன் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளருடன் நேர்காணல் நடத்தப்படும். இந்தியாவில் மட்டும்தான் உலகிலேயே மிகவும் அதிகாரம் படைத்த ஆணையம் ‘நியமனமுறை’ எனும் மிகவும் மோசமான முறை நடைமுறையில் இருக்கிறது. இப்போதுள்ள தேர்வு முறையானது, தேர்ந்தெடுக்கப் படும் நபர்களிடமும் ஒரு நிர்ப்பந்தத்தைக் கொடுக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் ஆணையர்கள், தன் பதவியில் நேர்மையுடனும், உண்மையுடனும் நடந்து கொண்டால்கூட, “ஓ, இவர் இந்த அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், இதனிடம் மென்மையாகத்தான் இருக்க வேண்டும்,” என்பதுபோன்று பொது வெளியில் விமர்சனங்கள் வருவதைப் பார்க்கிறோம். எனவே, ஆணையர்களை நியமனம் செய்வதில் ஒரு நடுநிலையான அமைப்பு முறையே இதற்குத் தீர்வாகும்.


திரிலோசன் சாஸ்திரி: சிலசமயங்களில் நல்லவித மாகச் செயல்படுத்தப்படும் நடைமுறைகள் ஒரு சட்டத்தைவிடச் சிறந்ததாக இருந்திட முடியும். நாம் ஒரு சட்டத்தை நிறைவேற்றிவிட்டோம் என்றால் அதிலுள்ள அனைத்து அம்சங்களும் மிகச்சரியாக நடந்திடும் என்று நாம் எதிர்பார்த்திட முடியாது. நாம்தேர்தல் ஆணையம் தன்னிடம் உள்ள அதிகாரங் களை மிகச்சரியாகப் பயன்படுத்துகிறது என்ற நம்பிக்கை நமக்குத் தேவை என்றே நான் நினைக்கிறேன். இதனைச் சட்டமாக்கிடும்போது, சட்டத்தில் உள்ள ஒரு கால்புள்ளி அல்லது சில சொற்றொடர்கள் நீதிமன்றங்களில் வித்தியாசமான முறையில் வியாக்கியானம் செய்யப்படுவதையும் நாம் பார்த்திருக் கிறோம். எனவே சட்டமாக்கும்போது சட்டச்சிக்கல்கள் வரும். உச்சநீதிமன்றம்கூட தேர்தல் நடத்தை விதிகளுக்கு, சட்ட அந்தஸ்து அளித்திடாமல் இருப்ப தையே ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே இப்போ துள்ள நிலையே சரி என்று நினைக்கிறேன் சரிதானா?


எஸ்.ஒய். குரேசி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் சட்டமாவதை முழுமையாக நானும் எதிர்க்கிறேன். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடமிருந்து எடுத்து, நீதித்துறையிடம் ஒப்படைக்கலாம். ஆனால் பின்னர், விதிமீறல்கள் தொடர்பாக நீதித்துறை முடிவெடுப்பதற்கு 20 ஆண்டுகள் கூட ஆகலாம். இப்போது சில சட்டங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் கதி இதுதான். இப்போது தேர்தல் நடத்தை விதிமீறல்கள், நடைபெறும்போது, தீ அணைப்புப் படையினர் செயல்படுவதுபோல விரைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்து முடிவெடுத்திட முடியாது. இரண்டாவதாக, தேர்தல் ஆணையம் அளித்திடும் தண்டனை என்பது அறிவுரை, எச்சரிக்கை, கண்டனம் அல்லது கடிந்துரைத்தல் என்பது போன்று இருப்பினும்கூட, அதன் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. இவர்களின் உத்தரவு மூலம் உருவாக்கப்படும் பொதுக் கருத்துதான் முக்கியம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சித் தலைவர் அது தொடர்பாக அறிவிப்பைப் பெறுகிற உடனேயே அது செய்தியேடுகளின் தலைப்புச் செய்தியாகிவிடுகிறது. மூன்றாவதாக, தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நம் நாட்டிலுள்ள சட்டங்களின்கீழும் நடவடிக்கை எடுக்கக்கூடியனவாக இருப்பின் அதன்கீழும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. ஆனால் அதன்மீதான தீர்ப்பு வருவதற்குத்தான் பத்தாண்டுகள் ஆகிவிடுகின்றன. அதே சமயத்தில் தேர்தல் நடத்தை விதிமீறலுக்காக ஒரு பிரதமருக்குக்கூட, “உங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது” என்று கோரி 24 மணிநேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி அறிவிப்பு அனுப்பப்படலாம். இவ்வாறு விரைந்து செயல்படுதல் என்பது நாட்டில் சட்டத்தின் கீழ் நடந்திடாது.


 திரிலோசன் சாஸ்திரி: தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் தற்போது இல்லை. பல அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதே கிடையாது. தங்கள் கணக்குகளை முறையாக அளிப்பதும் கிடையாது. தங்கள் கட்சியின் சட்டவிதிமுறை களின்படி தேர்தல்கள் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதும் கிடையாது. இதுபோன்ற விஷயங்களில் தேர்தல் ஆணையம் எதுவும் செய்யமுடியாத நிலையில் அதிகாரம் எதுவுமின்றிதான் இருக்கிறது. உரிய எச்சரிக்கை அளித்தபின்புஅத்தகைய கட்சிகளின் பதிவை ரத்து செய்திட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வேண்டு மானால் இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லலாமா?.


எஸ்.ஒய்.குரேசி: இந்தப்பிரச்சனை 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. நாட்டில் சுமார் ஈராயிரம் கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் பல போலியானவை. பணப் பரிமாற்றத்திற்காகவே (money laundering) பல இருந்து வருகின்றன. அவை தொடர்பாக நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த விஷயங்களைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் என்பது பல் இல்லாத ஒன்றுதான்.


நன்றி: தி இந்து

தமிழில்: ச. வீரமணி





;