பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கட்சி விரோத நடவடிக்கை உள்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காததால் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும். அன்புமணி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகள் உண்மையானது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக தொடங்கியதிலிருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அரசியல்வாதி என்பதற்குத் தகுதியற்றவர் அன்புமணி. ஆகவே பாமக செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அன்புமணி நீக்கம் செய்கிறோம். அன்புமணியுடன் பாமகவைச் சேர்ந்த யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாமகவினரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்.
இன்று முதல் எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. இரா என்ற முன்னெழுத்து தவிர, ராமதாஸ் என்ற பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது.
விரும்பினால் தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று அன்புமணியிடம் 3 முறை சொல்லியுள்ளேன். ராமதாஸ் என்ற தனி மனிதர் ஆரம்பித்த கட்சி பாமக. இதற்கு உரிமை கோர எனது மகன் உள்பட யாருக்கும் உரிமையில்லை. பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கியது களையெடுப்பு போன்றது. அன்புமணி தனிக் கட்சி தொடங்கினாலும் வளராது என்பதை உடன் இருப்பவர்கள் உணர வேண்டும். அரும்பாடு பட்டு வளர்ந்த கட்சி அன்புமணியால் அழிகிறது. " இவ்வாறு தெரிவித்தார்.