tamilnadu

img

இயந்திரங்கள் தானாக இயங்கினவா?

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று வேடந்தாங்கல். இங்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பறவைகள் சில மாதங்கள் தங்கி, உணவு உண்டு, இனவிருத்தி செய்து, கழிவுகளை விட்டு விட்டு, தனது சொந்த நாட்டிற்கு பறந்துவிடும். அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பன்னாட்டு மூலதனம் படிப்படியாக அதிகரித்து இன்று ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகளை உருவாக்கி, பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. ஆண்டுகள் கடக்கும் நிலையில் பெருகியுள்ள மூலதனத்தை அடுத்த கட்ட சுரண்டலுக்கு எடுத்துச் செல்ல, இங்கிருந்து பறக்கவும், மேலும் இயந்திரமயமாக்கவும் எத்தனிக்கிறது. 

வேலைவாய்ப்பு வளர்ந்ததும் உண்மை, பறிபோனதும் உண்மை

கடந்த 20 ஆண்டுகளாக சென்னை புறநகர் பகுதிகளில் வளர்ந்த தொழில் உற்பத்தியும் அதற்காக வருகை தந்த மூலதனமும் வேலை வாய்ப்பை உருவாக்கியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மூலதனம் தன்னை மேலும் மேலும் பெருக்கிக் (Multiple) கொள்ள புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.உபரி மதிப்பின் பெருக்கத்திற்கு வேலைவாய்ப்பு பெருகுவதும் அது நிரந்தரமற்றதாக இருப்பதும் முதலாளித்துவத்தின் நவீன வடிவமாகியுள்ளது. 

வேலைவாய்ப்பு என்ற பெயரில் அரசுகள்மூலதனத்தை கம்பளம் விரித்து வரவேற்கின்றன. பட்டுக்கம்பள விரிப்பில், வரிச்சலுகைகளும் உள்கட்டமைப்புகளும் செய்து தர அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. நிறுவனத்தின் உள்ளே உற்பத்திக்கான வேலை வாய்ப்பை விட, துவக்கத்தில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான வேலைவாய்ப்புகளையே அதிகம் அளித்தது. அதாவது நிரந்தரமற்ற வேலைவாய்ப்புகளை அதிகமாக அளித்தது. இருந்தாலும் வேலைவாய்ப்பு பெருகியது உண்மை.மாதச் சம்பளம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. கணிசமான தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதி சேமிப்புகளில் ஈடுபடும் நிலை உருவானது. இவை வரவேற்புக்குரியவை. மூலதனம் வருகையுடன் இணைந்த வளர்ச்சி இது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் இந்த வேலைவாய்ப்பு வயல் வேலைகளை, தச்சு வேலைகளை, மட்பாண்டம் செய்யும் வேலைகளை, கைத்தறி வேலைகளை என பல்வேறு பாரம்பரியத் தொழில்களை முடக்கி வளர்ந்துள்ளது. முதலாளித்துவ வளர்ச்சியில் சில பாரம்பரியத் தொழில்கள் தன்னை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இங்கு முற்றாக பாரம்பரியத் தொழில்கள் நசிந்துள்ளன. சில பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இந்த மாற்றம் துவங்கி, தற்போது புறநகர் பகுதிகளை வெகுவேகமாக ஆக்கிரமித்து வருகின்றது. 

நான்கு வகையான மாற்றங்கள்

மேலே குறிப்பிட்ட அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள் இப்போது பறிபோகும் அபாயத்திற்கு அதிகமாக ஆளாகியுள்ளது. குறிப்பாக பன்னாட்டு ஆலைகள் தங்களை இன்றைய தேவைக்குத் தகவமைக்க, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை சட்டவிரோதமாக முன்வைக்கிறது. இந்திய தொழிற் தகராறு சட்டங்களின் வரம்புகளையும், தொழிலாளர்களுக்கு அளித்து வந்த பாதுகாப்பையும் உடைத்து நொறுக்குகிறது. பின்வரும் காரணங்கள் முதலாளித்துவத்தை உந்தித் தள்ளுகிறது.ஒன்று, வரிசலுகைகள். ஆண்டுகள் பத்தை கடந்ததால் அந்த சலுகை இல்லாது போகும் நிலை, நிறுவனங்களுக்கு எரிச்சலைத் தருகின்றது. இரண்டு, தொழிலாளர்களில் ஒரு பகுதி, நிரந்தரமாகி ஓரளவு சம்பள உயர்வு பெற்று இருப்பது; மேலும் உயர்வை எதிர்பார்ப்பது முதலாளிகளின் சகிப்பின்மைக்கு காரணமாகியுள்ளது. மூன்று, தொழிற்சங்கங்களின் வளர்ச்சி படிப்படியாக உயர்கிறது. அதாவது கூட்டுப் பேர சக்தி உயர்கிறது. இது முதலாளிகளுக்கு கடும் ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. நான்கு, உலகம் முழுவதும் பேசப்படும் செயற்கை நுண் அறிவு இயந்திரங்களின் வளர்ச்சி ஆகும். அதாவது தொழில் புரட்சி 4.0 என்றழைக்கப்படும் ரோபோமயமாகுதல். 

இந்த நான்கு வகையான மாற்றங்கள் மிகப்பெரிய விளைவுகளை ஆலைகளுக்குள் உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ஆலை நிர்வாகங்கள் தொழிற்சங்கம் பலப்படும் இடங்களில், மேற்படி மாற்றங்களுக்கு செல்கின்றன. அத்தகைய ஆலைகள் தான் நோக்கியா, பாக்ஸ்கான். நோக்கியா கைபேசிக்கான மென்பொருள் பின்லாந்தில் இருந்து இறக்குமதி ஆனது, அதற்கு இந்திய அரசு விதித்த வரி அதிகம். எனவே ஆலையை மூடுகிறேன் எனக் கூறியது. பாக்ஸ்கான், நோக்கியா மூடியதால் எனக்கு உற்பத்தி இல்லை, எனவே மூடுகிறேன் என்றது. இப்போது ரைசிங் ஸ்டார் மொபைல் இந்தியா (பாக்ஸ்கான் குடும்பத்தை சார்ந்தது) நோக்கியா கைபேசி உள்ளிட்ட அனைத்து பிரான்ட் கைபேசிகளையும், ஒப்பந்த தொழிலாளர் கொண்டு உற்பத்தி செய்கிறது. பல ஆயிரம் வேலைவாய்ப்பை அழித்து, குறைவான கூலிக்கு சில ஆயிரம் பேருக்கு நிரந்தரமற்ற வேலை அளித்துள்ளது. அதேநேரம் தனது சந்தை வாடிக்கையாளர்களையும் தக்கவைத்துள்ளது.

டாங்சன் மற்றும் சோவல்
இந்த இரண்டு ஆலைகளுமே கொரியாநாட்டை சார்ந்த ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கான உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும். இந்த பன்னாட்டு ஆலைகள் இந்தியாவில் முதலீடு செய்கிற போது, தங்களின் சுற்றம் சூழ வருகின்றனர். அதாவது, ஹூண்டாய் நிறுவனத்திற்கு வேண்டப்பட்டவர்களே. அவாசின் என்ற நிறுவனம் மூலம், டாங்சன் மற்றும் சோவல் நிறுவனங்கள்  உற்பத்தி செய்கின்றன. இன்னும் பல இவ்வாறு செயல்படுகின்றன.அவாசின் இந்த உற்பத்தி தேவைக்காக, ஹூண்டாய் நிறுவனத்திற்கு சொந்தமான டையிங் இயந்திரங்களை டாங்சனுக்கும், சோவலுக்கும் அளித்து, ஒரு இடைத் தரகு நிர்வாகம் செய்கிறது. தற்போது இரு ஆலைகளும் 15 ஆண்டுகள் கடந்த நிலையில், தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் தொழிற்சங்கம் மூலம் பாதுகாப்பு தேடும் வளர்ச்சி ஆகியவற்றை முறியடிக்க, ஹூண்டாய், அவாசின் ஆகிய பெரும் நிறுவனங்கள், இயந்திரங்களைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2018 மார்ச் மாதத்தில் டாங்சன் மூடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து போராடிக் கொண்டுள்ளனர்.இப்போது சோவல். இங்கு 151 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தியத் தொழிற்தகராறு சட்டப்படி, நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், ஆலையை மூடவோ, ஆட்குறைப்பு செய்யவோ, வேலை இல்லை பாதி ஊதியம் என்ற உடன்பாட்டை உருவாக்கவோ மாநில தொழிலாளர் துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆலையில் தொழிற்சங்கம் இருக்கும் நிலையில் இது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மேற்படி கொரிய முதலாளிகள் தொழிலாளர் துறை மற்றும் தமிழக அரசை எளிதாக கையாண்டு, கண்களில் மண் தூவி, நீதிமன்றம் மூலம் ஆலை மூடலுக்கு செல்கின்றனர். இதற்கு  மாநில அரசின் காவல்துறை அடியாளாக பயன்படுத்தப்படுகிறது.

நீதித்துறையும் காவல்துறையும்
ஆலைமூடலுக்கு நீதித்துறையில் உள்ள சில சட்ட நுணுக்கங்களை ஆலை நிர்வாகங்கள் அதீதமாக பயன்படுத்துகின்றன. ஆர்பிட்ரேசன் சட்டத்தைப் பயன்படுத்தி, கொடுக்கல் வாங்கல் தகராறு; எனவே இயந்திரங்களை எடுத்துச் செல்கிறோம் என முறையிடுகின்றனர். நீதிமான்கள் சட்ட விவரங்களை ஏற்று, சரி எடுத்துச் செல்லுங்கள்; எடுத்துச் செல்ல காவல்துறை உரிய ஏற்பாடு செய்யுங்கள்; குறிப்பாக இயந்திரங்கள் எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பு அளியுங்கள் என உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர். இவை அனைத்தும் இரண்டு நாள்களில் அரங்கேறுகிறது.இயந்திரங்கள் தானாக இயங்கினவா? யார் இயக்கியது? இயக்கியவர்கள் கதி என்னவாகும்? அவர்கள் எத்தனை பேர்? அவர்களை சார்ந்து எத்தனை பேர் உள்ளனர்?- போன்ற கேள்விகளுக்கு இடம் தராமல் நீதிமான்கள் மேற்படி உத்தரவை பிறப்பிப்பது வேதனையான உண்மை. ஒரு முதலாளி மற்றொரு முதலாளியை ஏமாற்றுவது அநியாயம். எனவே சட்டத்தின் படி இயந்திரங்களை எடுத்துச் செல்ல உத்தரவிடுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த இயந்திரங்களுடன் ஒரு இயந்திரமாக பதினைந்து வருடங்கள் வேலை செய்த, உற்பத்தி அளித்த தொழிலாளர்கள், சட்ட ரீதியில் தங்களுக்கான அனைத்து பலன்களையும் பெற்றுள்ளனரா; அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் போன்றவை குறித்து கேள்வி எழுப்பி, அதைத் தீர்த்து விட்டு வாருங்கள் என நீதிமான்கள் பரிசீலிப்பது கூட இல்லை. அந்த அளவிற்கு தொழிலாளி தகுதி குறைவாக கருதப்படுகிறார்.நீதித்துறையின் உத்தரவை அமலாக்கவில்லை என என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்துவிடும்; நான் கோர்ட்டில் கைகட்டி நிற்க வேண்டுமா? முடியாது; நியாயமா, அநியாயமா என்பதை காவல் துறை பார்க்காது; உத்தரவை அமலாக்கும்; எங்களிடம் உங்கள் கோரிக்கைகளை வைப்பது சரியல்ல; மீறினால் கைது செய்வோம்; காவல்துறையை பயன்படுத்தி உங்களை அப்புறப்படுத்தி இயந்திரங்களை எடுத்துச் செல்வோம்- என உயிரற்ற பொருளாக காவல்துறை அதிகாரிகள் வாதம் செய்கின்றனர். காவல்துறை மற்றும் நீதித்துறையினர் இவ்வாறு வாதம் செய்வதைப் பார்க்கும் போது செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களுடன் பேசுகின்றோமோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க சட்டத்திருத்தம் முன்மொழியும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் மனித உரிமைகளை பாதிக்காத கண்ணோட்டத்துடன் சட்டங்களை கட்டமைக்க நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.

போராட்டங்களும்  கைதுகளும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் போராட்டங்கள் இந்தப் பின்னணியில் தான் உருவாகின்றன. சில ஆயிரம் தொழிலாளர்களே தங்களுக்குள் சங்கம் அமைக்கும் உரிமையை தேடிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கும் இத்தகைய அச்சுறுத்தலை நவீன முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது. இது மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைக்கான போராட்டம். வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி குறித்து இந்தியாவில் முழக்கமிடும் வல்லுநர்கள், மனித குலத்தின் அடிப்படை உரிமை பறிப்பை கண்டுகொள்வதில்லை. தொழிற்சங்க ஊழியர்கள் கைதாவது, காவல்துறையுடன் மோதி தாக்குதலுக்கு ஆளாவது இந்த அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டமாகும். காவல்துறை அல்லது இதர அதிகார வர்க்கம், தங்களின் செயல் மூலம், தொழிலாளர்கள் அடக்கப்பட்டதாக நினைக்கிறது. ஆனால் தங்களுக்காக போராடியவர்கள் கைதுசெய்யப்படுவதைக் கண்டு கொதிக்கும் நிலைக்கு, தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது வெறும் தனிநபர் பற்று மட்டுமல்ல; விவசாய நிலத்தை பாதிக்கும் போது விவசாயி மட்டுமல்ல, விவசாயத் தொழிலாளியும் இணைந்து போராடுவதைப் போல. உற்பத்தி உடைமையற்ற தொழிலாளிக்கு உழைப்பை விற்கும் வாய்ப்பும் பறிபோகிறது. அதைத் தடுக்கும் அரணாக போராட்டங்கள் உதவி செய்கிறது பலரை விழித்துக் கொள்ள தூண்டுகிறது. 

சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் மீது புனையப்பட்ட வழக்குகளில் ஒன்று, தொழிலாளர் தற்கொலை செய்து கொள்வர் என மிரட்டினார் என்பதாகும். இதை நீதிமன்றம் தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது. உடமையற்ற தொழிலாளியின் வேலைவாய்ப்பை பறித்து, பிழைப்பாதாரத்தை பறித்து விட்டபின், பட்டினி கிடந்து சாக நேரிடுமே என்பது குறித்து நீதிமன்றம் யோசிக்கவில்லை. முதலாளித்துவ சமூகத்தின் காவல்துறையும் நீதித்துறையும் முதலாளிகளை சீர்திருத்த முடியாது.  ஜனநாயக சக்திகளின் வலுவான போராட்டமே, சட்டரீதியிலும் சமூகரீதியிலும் பாதுகாப்பை அளிக்க நிர்பந்திக்கும்.
 

சோவல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்.