tamilnadu

img

பக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் விசாகத் திருவிழா களையிழந்து காணப்பட்ட கடற்கரை, கோயில் வளாகம்

திருச்செந்தூர், ஜூன் 4- கொரோனா ஊரங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் யாரும் இல்லாமல் நடந்தது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழா வசந்த விழாவாக பத்து நாள்கள் நடைபெறும். நிகழாண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், கொரோனா பொது முடக்கம் காரணமாக விழா தொடங்கவில்லை. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் களையிழந்து நடைபெற்றது. குறிப்பிட்ட அர்ச்சகர்கள் மற்ற கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.10 மணிக்கு சுப்ரபாத சேவையும் 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு விசாகத் திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கும் சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற காலங்கள் தொடர்ந்து நடைபெற்றது. பூஜைகளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருச்செந்தூர் முருகன் கோவிலில் எந்த திருவிழா நடைபெற்றாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள். விசாகத் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முடி காணிக்கை செலுத்தி கடலில் புனித நீராடி அங்கபிரதக்ஷணம் செய்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆனால் விசாகத் திருவிழா, ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாருமின்றி நடந்தது. கடற்கரை மற்றும் கோயில் வளாகம் களையிழந்து காணப்பட்டது.