அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கேரளாவின் மக்கள் நிச்சயமாக, எதிர்க்கட்சிகளின் மறைமுக நிகழ்ச்சி நிரலை புரிந்து கொண்டு, நாட்டின் ஒரேயொரு நவீன தாராளமயமில்லாத சமூக மற்றும் பொருளாதாரப் பாதையை ஆதரிப்பார்கள்.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு ஐந்தா வது ஆண்டில் நுழைகிறது. கடந்த நான்காண்டுகளில், அந்த மாநிலத்தின் சமூக துறைகளில் அடையப் பெற்றுள்ள வரலாற்று ரீதியான சாதனைகளை பலப்படுத்தவும், அதனை விரிவுபடுத்தவும், மேலும், அவற்றை அடித்தளமாகப் பயன்படுத்தி விவசாயம் மற்றும் தொழிற்துறையில் மிகப்பெரும் வளர்ச்சிகளை அடையவும் அரசின் கொள்கை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு செய்யும் போது, அந்த அரசு அதற்கு நியாய மானதைவிட அதிகமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. எதிர்பாரா இயற்கை பேரிடர்கள்-2017ல் ஒக்கி, அதைத் தொடர்ந்த இரண்டு தொடர்ச்சியான ஆண்டுகளில் பெரு மழைகள், அதன் விளைவாக கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளம், மண்சரிவுகள்-அதன் பிறகு நிபா தொற்று, அதைத் தொடர்ந்து கோவிட்-19 பெருந்தொற் றால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி
தடைகளைத் தாண்டிய வளர்ச்சி
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றால் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள கசப்பான பிரச்சாரம், மிகப் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த பிரச்சாரங்களின் உண்மையான நோக்கம், இடதுசாரிகளின் தலைமையில் கேரளாவின் சாதாரண மக்களின் பங்கெடுப்பில் ஏற்பட்டுள்ள சாதனைகளை சீர்குலைப்பதே. கேரள சட்டமன்றத்திற்கான தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், இந்திய அரசு ஏற்படுத்தும் முட்டுக்கட்டைகளுக்கிடையே நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு எதிரான ஒரே ஒரு நேர்மையான மாற்றை, எதிர்கட்சிகள் சீர்குலைக்க முயல்கின்றனர். இஜமு(இடது ஜனநாயக முன்னணி) அரசு பொறுப் பேற்ற போது அந்த மாநில அரசின் வருவாயில் தேக்கமும், வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறைகள் உயர்ந்து கொண்டும் இருந்த நிலைமைகள் நீடித்தன. அரசியல் சாசன பிரிவுகளின்படி, மாநிலங்களின் வருவாய் ஈட்டும் திறன்களுக்கும், அந்த மாநிலத்திற்கு செய்ய வேண்டிய செலவுகளான கடமைகளுக்கும், அதிகாரம் மற்றும் நிதி ஆகியவற்றில் மாநிலம் மற்றும் மத்திய அரசு களுக்கிடையே, அசமத்துவமான நிலை நிலவுகிறது. 1991க்கு பிறகு நவீன தாராளமயக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு, ஒரு மாநில அளவில் மாற்றுப் பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்துவது மிகவும் சிரமமான பணியாகிப் போனது.
மாநில அரசின் கடன் வாங்கும் அளவு உதவி மனப்பான்மை இல்லாத மத்திய அரசால் அவ்வப்போது வெட்டி சுருக்கப்படுவது, ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்யும் இழப்பீட்டுத் தொகை யை தராமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு போன்றவை கேரளாவின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. இத்தகைய சவால்கள் இருந்தாலும், இஜமு அரசு அனைத்துத் துறைகளிலும் போதுமான முதலீடுகள் செய்து, அதன் பலன்கள் அனைவரையும் சென்றடைய வழி செய்து இப்போது அதன் நேரிடையான முடிவுகள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளன. தற்போது மாநிலத்தின் பொருளாதாரம் 7.2 சதவீதம் என்றளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருந்தது.
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள்
நாம் சுருக்கமாக கடந்த நான்காண்டுகளில் கேர ளத்தின் மிக முக்கியமான 5 துறைகளான விவசாயம், பொதுத்துறை தொழில்கள், சமூக பாதுகாப்பு, பள்ளிக் கல்வி மற்றும் உட்கட்டமைப்புகள் உருவாக்குதல் ஆகிய வற்றில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். இஜமு அரசு கேரளாவின் விவசாயத்தை நவீனப்படுத்தும் முன்முயற்சிகளை உந்தித் தள்ளியதன் வாயிலாக விஞ்ஞான ரீதியான விவசாயத்தின் மூலம் விவசாயத்தில் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்த முயற்சி கள் மேற்கொண்டது. 3,860 கோடி ரூபாய் அளவிலான சுபிக்சா கேரளம் திட்டம், கோவிட்-19க்குப் பிறகான மீட்சி திட்டங்களில் மையமானதும், உணவு உற்பத்தியை விரிவு படுத்தவும் தீவிரப்படுத்துவதற்குமான திட்டம். மேலும், இந்த திட்டம் வீட்டு விலங்கு வளங்கள், பால் பொருட்கள் சார்ந்த நடவடிக்கைகள், மீன்பிடி, நீர் ஆதாரங்களை வளர்த்தெடுப்பது, கூட்டுறவு துறை மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மூலம் இவற்றின் மதிப்புக் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகியன அடங்கியதாகும்.
கேரளாவின் பொருளாதாரத் திட்டமிடல், நாட்டின் மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகள் மேற்கொண்டி ருக்கும் பொதுத்துறைகளில் அரசின் மூலதனத்தை பின்வாங்குவது (தனியார்மயம்) என்ற நடவடிக்கையை முற்றிலும் புறந்தள்ளிய திட்டமிடலாகும். முந்தைய கூட் டணி ஆட்சியின் முடிவில் இந்த பொதுத்துறை நிறு வனங்கள் ஒட்டு மொத்தமாக 213 கோடி ரூபாய் நட்டத்தை அடைந்திருந்தன. இஜமு ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டிலேயே இதே நிறுவனங்கள் 106.91 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டின. சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட பென்ஷன் உதவி கள் 58.5 லட்சம் பயனாளிகளுக்கு மேல் வழங்கப் பட்டிருப்பது கேரளாவில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை பாதுகாக்கும் தனித்துவமான நடவடிக்கையாகும். இதற்கு மேல் லைஃப் எனப்படும் வாழ்வாதாரம் உள்ளடக்கிய நிதி அதிகாரம் (லைவ்லிகூட் இன்குலுஷன் அண்ட் பைனான்சியல் எம்பவர்மென்ட்) திட்டத்தின் வாயிலாக “அனைவருக்கும் வீடு” என்பது அமலாக்கப்பட்டதன் விளை வாக 2.5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே கேரளாவில் மட்டுமே குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையான 5 லட்சம் மாணவச் செல்வங்கள் தாங்கள் படிக்கும் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளுக்கு வந்துள்ளனர். கேரள அரசு வெற்றிகரமாக ரூ.50,000 கோடி அள விற்கான உட்கட்டமைப்பு திட்டங்களை கேஐஐஎப்பி (கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம்) மூலம் தொடங்கி வைத்துள்ளது. ரூ. 3500 கோடி மதிப்பீட்டில் மலைச் சாலைத் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடற்கரைச் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. அதி விரைவு இரயில் தடங்களுக்கான வேலைகள் மிக விரை வில் தொடங்க உள்ளன. தேசிய நீர்வழிப் போக்குவரத்தின் திட்டங்கள் நிறைவுறும் நிலையில் உள்ளன. கெயில் நிறு வனத்தின் பைப்லைன் மூலம் கேஸ் என்ற கனவு நிறை வேறியுள்ளது. இந்தத் திட்டங்கள் புதிய வடிவிலான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கோருபவை. இவற்றிற்கான தொழில் நுட்பங்களை வழங்கும் நிறுவனங்கள், வெளிப்படை யான நடைமுறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவற்றி ற்கு மிகத்துல்லியமாக பணி வரையரைகள் வழங்கப் பட்டு, அந்த நிறுவனங்கள் வழங்கும் ஆலோசனைகள் அரசாங்கத்தால் அவற்றின் பொருத்தப்பாடு மற்றும் மாநிலத்தின் தேவைகளுக்கு அவை எந்தளவுக்கு பயன்படும் என்பன பற்றி தர ஆய்வு மேற்கொள்ளப்படு கிறது. இத்தகைய சர்வதேச, தேச மற்றும் தர நிர்ணயங்கள் மாநிலத்தின் தொடர்ச்சியாக இருந்த அரசுகள் ஏற்கனவே அமலாக்கிய நடைமுறைகளாகும்.
மறைமுக நிகழ்ச்சி நிரல்
இந்தச் சூழலின் பின்னணியில்தான் சமீப காலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மேற்கொள்ளும் அவதூறு பிரச்சாரங்களை பார்க்க வேண்டும். சில அமைப்பின் ஊடகங்கள், இந்த அரசை தாக்கும் நோக்கத்து டன் நிரூபிக்கப்படாத ஊழல் புகார்களை கூறியும், இஜமு அரசின் தலைவர்களை அவதூறு செய்தும் வரு கின்றன. ஏதாவது நடைபெறாதா என்ற எதிர்பார்ப்புடன் கற்பனையான செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் கடத்த மேற்கொண்ட முயற்சிகளை அரசாங்கத்தோடு பிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படையான அறிவு இருந்தாலே, சுங்கம் மற்றும் சர்வதேச அளவிலான கடத்தல் கிரிமினல் நடவடிக்கைகள், அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசின் அதிகார வரம்புக்குட்பட்டவை என்பது புலப்படும். முதல்மந்திரி சரியாக, முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை கோரி மாநில அரசின் ஒத்துழைப்பை தர முன்வந்துள்ளார்.
அந்த விசாரணையில் இதுவரையில், குற்றவாளி களுக்கும் இஜமு இடையிலான எந்த தொடர்பையும் கண்டுபிடிக்கவில்லை. மாநில அரசின் ஒரு திட்டத்தில் பணியாற்றிய ஒரு ஒப்பந்தத் தொழிலாளி, இந்த கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர் என்று விசாரிக்கப்படும் நிலையில், அவர் தன்னுடைய கல்வித் தகுதி பற்றி போலி யான தகவல்களை அளித்திருந்த நிலையில் அவர் உடனடி யாக நீக்கப்பட்டார், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபரை பணியிலமர்த்திய அந்த குறிப்பிட்ட துறையை மேற்பார்வை பார்க்க வேண்டிய ஒரு உயரதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. முதல்மந்திரி வெளிப்படையாகவே குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். கேரளாவின் மக்கள் நிச்சயமாக, எதிர்க்கட்சிகளின் மறைமுக நிகழ்ச்சி நிரலை புரிந்து கொண்டு, நாட்டின் ஒரேயொரு நவீன தாராளமயமில்லாத சமூக மற்றும் பொருளாதாரப் பாதையை ஆதரிப்பார்கள்.
உண்மையில், வெளிப்படைத் தன்மை என்பதை இஜமு அரசின் நடைமுறைக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை, கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் தினசரி பத்திரிகையாளர் சந்திப்பு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அவர் தினந்தோறும் மாநிலத்தில் கோவிட்-19 தாக்கம் பற்றிய மிக விரிவான அறிக்கையை தாக்கல் செய்தபிறகு, பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்விகளை எதிர்கொள்கிறார், அவற்றில் சில உள்நோக்கத்துடனும், சில ஆக்ரோஷத்துடனும் இருந்தாலும் கூட.
தமிழில் : க.ஆனந்தன், தூத்துக்குடி