மம்தாவின் ‘வண்ணக் கனவுகள்’
... வாக்காளர்களை ஈர்க்குமா 10 வாக்குறுதிகள்? மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், “அனைவருக்கும் அனைத்தும்” என்ற முழக்கத்தோடு திரிணாமுல் காங்கிரஸ் தனது 10 அம்சத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்புகளை பாஜக “வண்ணக் கனவுகள்” என விமர்சித்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளைக் குறிவைத்தே இந்த அம்புகள் ஏவப்பட்டுள்ளன. ஏற்கனவே ‘துவாரே சர்க்கார்’ (வாசல் தேடி அரசு) மற்றும் ‘துவாரே ரேஷன்’ திட்டங்களை கொண்டு வந்த மம்தா, இப்போது ‘துவாரே சிகிச்சை’ (வாசல் தேடி மருத்துவம்) என்ற புதிய வாக்குறுதியை அளித்துள்ளார். இதன் மூலம் முதியோர்களுக்கும், எளிய மக்களுக்கும் மருத்துவச் சேவையை எளிதாக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், லக்ஷ்மி பண்டார் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆண்டுக்கு ரூ. 18,000-ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500 உதவித்தொகை வழங்கப்படும்; நிலமற்ற விவசாயிகளை ஆதரிக்கவும், விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு பட்ஜெட்டை மம்தா முன்மொழிந்துள்ளார். பிரதமர் மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ முழக்கத்தை ‘சப்கா வினாஷ்’ (அனைவருக்கும் அழிவு) என மம்தா கிண்டலடித்துள்ளார். அதேநேரம், திரிணாமுல் அரசின் இந்த அறிக்கையை “நிறைவேற்ற முடியாத கனவு” என பாஜக மாநிலத் தலைவர் சாமிக்கா பட்டாச்சார்யா விமர்சித்துள்ளார். கொடுக்கப்படும் வாக்குறுதிகள்... கிடைக்குமா வாக்குகள்? இலவசங்கள் மற்றும் உதவித்தொகைகளை நம்பி மம்தா களம் இறங்கியுள்ளார். ஊழல் புகார்கள் ஒருபுறம் வலுவாக இருந்தாலும், இத்தகைய நலத்திட்டங்கள் மூலம் சாமானிய மக்களின் வாக்குகளைத் திரிணாமுல் பக்கம் தக்கவைக்கும் மம்தாவின் முயற்சி பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
