‘தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார், வாயைத் திறந்து சும்மா - கிளியே! வந்தே மாதர மென்பார்!’
நாடாளுமன்றத்தில் மோடி அரசை விளாசிய சு. வெங்கடேசன் எம்.பி.
புதுதில்லி, டிச. 8 - தாயைக் கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சிக்காதவர்கள் தான், தாய் நாட்டை வணங்கு வதாக ‘வந்தே மாதரம்’ சொல்லி கூப்பாடு போடு கிறார்கள் என்று மகாகவி பாரதி பாடிய பாட்டுக்கு சரியான உதாரணம் தான் இன்றைய பாஜக ஆட்சி யாளர்கள் என்றும், விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த அவர்கள் ‘வந்தே மாதரம்’ என்று உச்சரிக்க தகுதியில்லை என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. கடுமையான சாடினார். ‘வந்தே மாதரம்’ பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதாக கூறி, அதனைக் கொண்டாடும் வகையில், மக்களவையில் ‘வந்தே மாதரம்’ குறித்த விவாதத்தை ஒன்றிய பாஜக அரசு நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி விவாதத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினர். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றி னர். இதனொரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில், மதுரைத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பங்கேற்று உரை யாற்றினார். அந்த உரை வருமாறு: பக்கிம் சந்திரர் எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு விவா தித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாடலுக்கு முதன் முதலில் மெட்டமைத்துப் பாடிய ரவீந்திரநாத் தாகூரே, அதற்கு இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு எழுதிய ‘காரே பைரே’ (Ghare Baire) என்ற தன்னுடைய நாவலில் அந்தப் பாடல் பற்றி விவாதித்திருக்கிறார். அரசியல் சாசன சபை அந்தப் பாடலை மிக விரிவாக விவாதித்து, இரண்டு சரணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, நான்கு சரணங்களை விடுவித்து ஒரு முடிவு செய்தது. இவ்வளவுக்கும் பிறகு, இந்த அவையில் இந்தப் பாடலினுடைய 150-ஆவது ஆண்டை ஒட்டி விவாதிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி தரப்பு விரும்பியிருக்கிறது. பிரதமர் அவர்களே குறிப்பிட்டதுபோல, வந்தே மாதரம் என்ற இந்த முழக்கம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆன்மாவாக இருந்தது உண்மை தான். ஆனால், இந்த ஒரு முழக்கம் மட்டுமல்ல. வந்தே மாதரம் என்ற முழக்கத்திற்கு இம்மியளவும் குறைந்த தல்ல ஜெய்ஹிந்த் என்ற முழக்கம். ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்திற்குத் துளியளவும் சளைத்ததுல்ல இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம். விடுதலைப் போராட்ட முழக்கங்கள் மற்றும் தியாகம் ஒவ்வொரு முழக்கத்திற்கும் பின்னாலும் லட்சக்கணக்கானவர்கள் திரண்டார்கள். • தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள். • துப்பாக்கிக் குண்டுக்கு நெஞ்சு காட்டியவர்கள். • பீரங்கியின் வாயிலில் வைத்துச் சுட்டுத் தள்ளப்பட்டவர்கள். • குதிரையின் குளம்பால் எத்தி உதைக்கப்பட்டவர்கள். • ஜாலியன் வாலாபாக்கில் பொதுக்கூட்டம் கேட்டவர்கள். • சிட்டகாங் ஆயுதக் கிடங்கை கொள்ளை அடித்தவர்கள். • தண்டிக்குப் போய் உப்பு காய்ச்சியவர்கள். • அதேபோல தூத்துக்குடியிலிருந்து கப்பல் ஓட்டியவர்கள். - என்று ஒவ்வொரு முழக்கத்திற்கும் பின்னால் லட்சக்கணக்கானோர் திரண்டார்கள். அதுசரி, நீங்கள் எந்த முழக்கத்தின் பின்னால் திரண்டீர்கள்? இந்த முழக்கங்கள் எல்லாம் யாருக்கு எதிராக எழுப்பப்பட்டதோ, அவர்களுக்குப் பின்னால் நீங்கள் இருந்தீர்கள். தப்பித் தவறி விடுதலைப் போரில் பங்கெடுத்தாலும்கூட, ‘தவறிப் பங்கெடுத்து விட்டேன்’ என்று மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்து விட்டு வெளியில் வந்தீர்கள். இந்த முழக்கத்தைக் கடந்த காலங்களில் ஏந்திய வர்கள் எல்லாம், எழுதியவர்கள் எல்லாம் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள். ஆனால், அதற்கு எதிர் திசையிலே இருந்துவிட்டு, நீங்கள் இன்றைக்கு இதை விவாதிக்க வேண்டும் என்று சொல்லுகிறபோது தான், உங்களது அரசியலை பட்டவர்த்தனமாக இந்த தேசத்துக்கு முன்னால் விவாதிக்க வேண்டிய நேரம் இது என்பதை நான் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தியாவின் பன்மைத்துவம் ‘ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்’ என்ற முழக்கம் ‘வந்தே மாதரம்’ என்பதைவிட மேலே எழுந்து வரக் காரணம், இந்த தேசத்தினுடைய பன்மைத் தன்மைதான். என்றைக்காவது உங்கள் உதட்டில் ‘ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்’ என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்களா? அதற்குப் பதில் இன்றைக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களது மாநில அரசுகள் சுற்ற றிக்கை அனுப்புகின்றன. ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் பாட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு சுற்றறிக்கை அனுப்புகிறது. அடுத்தவர் உதடு என்ன பாடல் பாட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு இந்தச் சுதந்திரத்தை யார் கொடுத்தது என்ற கேள்வியை இங்கே நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஆறாத காயங்கள் ஆற்றப்பட வேண்டும். ஆனால், காயங்களைக் கிளறுவதுதான் உங்களுக்கு இலாபம் தருகிறது என்பதால், நீங்கள் காயங்களைக் கிளறிக்கொண்டே இருக்கிறீர்கள். புதிய நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் அடையாளங்கள் இதோ, இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடம். இந்தக் கட்டிடத்திற்குள்ளே 12 திருவுருவச் சிலை களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். யாருடைய சிலைகள் தெரியுமா? • சிவன்; • விஷ்ணு • பிரம்மா; • துர்கா • மிதுனா; • மஞ்சுஸ்ரீ • யோகினி; • லிங்கேஸ்வர் உட்பட 12 திருவுருவச் சிலைகளை வைத்திருக்கிறீர்கள். ஏன்? கிறிஸ்தவம் சார்ந்த திருவுருவச் சிலை ஒன்று கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையா? திருக்குர்ஆனினுடைய அடையாளம் ஒன்று கூடக் கிடைக்கவில்லையா? இந்த தேசத்தின் பன்மைத்தன்மை இந்த அவையிலே கூட எதிரொலிக்கக் கூடாது என்று நினைக்கிற நீங்கள், தேசபக்தியைப் பற்றி எங் களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறீர்கள். பன்மைத்தன்மைதான் இந்த வரலாறு. மாறாக, அதற்கு எதிராக உங்கள் உபதேசம் திருப்பரங்குன்றம் வரை நீளுகிறது. எல்லோரின் கண்களுக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபம் தெரிகிறது. ஆனால், உங்கள் கண்களுக்கு தர்கா மட்டும்தான் தெரிகிறது. • மக்களுக்குத் தேவை பக்தி; உங்களின் தேவை பகை! • எல்லோருக்கும் தேவை ஆன்மீகம். ஆனால், உங்களுக்குத் தேவை கலவரம்! நீதிக்குத் தலைவணங்காத தீர்ப்பு பக்கிம் சந்திரருடைய இந்தக் கவிதையை, நாவலைப் பற்றிப் பேசுகிறபோது, கவியரசு கண்ண தாசன் சொன்ன ஒரு கதையை இங்கே மேற்கோள் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்: சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலே இருந்த ஒரு சுவர் இடிந்து விழுந்து விட்டது. அந்தச் சுவரை ‘நீ கட்ட வேண்டும், நான் கட்ட வேண்டும்’ என்று இரண்டு தரப்புகளும் போரிட்டு விட்டுக் கடைசியில், சொர்க்கத்தின் தரப்பிலே இருந்தவர்கள் சொன்னார்களாம்: “நாங்கள் வழக்குத் தொடுக்கப் போகிறோம்” என்று. உடனே நரகத்தின் தரப்பிலே இருந்தவர்கள் சொன்னார்களாம்: “நீ வழக்குத் தொடுத்தால் உன்னால் வெற்றி பெற முடியாது. ஏனென்றால், தீர்ப்பு சொல்ல வேண்டியவர் எங்களின் பக்கம் இருக்கிறார்” என்று சொன்னார்களாம். இது தமிழ்நாட்டுக்கு இன்றைக்கு மிகவும் பொருந்தும். மதுரைக்கு மிக மிகப் பொருந்தும். திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாகப் “புண்ணியவான்கள்” இங்கே விளக்கேற்றலாம் என்று கல் தூணில் எழுதப்பட்டு, அதிலே விளக் கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், ‘நான் புண்ணியவான் அல்ல, அங்கே விளக்கேற்ற மாட்டேன்’ என்று சொல்லி ஒருவர் அடம் பிடிக்கிறார். உங்கள் தீர்ப்புக்கு முன்னால் நீதி ஒருபோதும் தலைவணங்காது என்பதுதான் இந்த அவையிலே இருந்து நாங்கள் சொல்லிக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அரசியல் நோக்கம் ‘வந்தே மாதரம்’ பாடலினுடைய 150-ஆவது ஆண்டு என்ற ஆதாரத்தை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. அந்தப் பாடலின் இரண்டு சரணம் முதலிலே எழுதப்பட்டது; நான்கு சரணம் பின்னால் ‘ஆனந்த மடம்ங நாவலிலே சேர்க்கப்பட்டது. எழுதப்பட்ட சரியான ஆண்டு இல்லை. ஆனால், உங்களுக்கு வேறு ஒரு தேவை இருக்கிறது. அந்தத் தேவை வர இருக்கின்ற சட்ட மன்றத் தேர்தல், மேற்கு வங்காளத்தினுடைய தேர்தல். காலமெல்லாம் உங்களின் தேவை தேர்தலாக இருக்கிறது. நாட்டின் தேவை வேறொன்று: • நான்கு தொழிலாளர் நலச் சட்டங்களால் கோடிக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். அதைப் பற்றி இந்த அவையிலே விவாதிக்க நீங்கள் தயாராக இல்லை. • ஒட்டுமொத்தமாக விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் சொல்லத் தயாராக இல்லை. • காற்று மாசால் தில்லி ஸ்தம்பித்துப் போயிருக் கிறது. அதைப் பற்றிப் பேச நீங்கள் தயாராக இல்லை. இறுதியாக, பிரதமர் அவர்கள், மகாகவி சுப்பிர மணிய பாரதியை நினைவூட்டினார். சுப்பிரமணிய பாரதிதான் ‘வந்தே மாதரம்’ பாடலை 1908-ஆவது ஆண்டு தமிழிலே மொழிபெயர்த்தார். பிரதமர் அவர்கள் நினைவூட்டியதை நான் சொல்கிறேன். பாரதியினுடைய அருமையான அந்தக் கவிதை: “தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் வாயைத் திறந்து சும்மா - கிளியே! வந்தே மாதர மென்பார்!” என்பது தான். அது பாரதி உங்களுக்குச் சொன்னது என்று சொல்லி முடிக்கிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. பேசினார்.
