tamilnadu

கூடுதலாக ரூ.6 லட்சம் வசூல்: மாணவிக்கு திருப்பி தர நீதிமன்றம் உத்தரவு

கூடுதலாக ரூ.6 லட்சம் வசூல்: மாணவிக்கு திருப்பி தர நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.25 - நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஒன்று, மாணவரிடம் வசூலித்த ரூ.6 லட்சத்தை நான்கு வாரங்களுக்குள் திரும்ப வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.பிரியதர்ஷினி என்ற மாணவி மாதா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி விசாரித்து இந்த தீர்ப்பை வழங்கினார். 2015 முதல் 2024 வரையிலான கல்வியாண்டுகளில் பி.டி.எஸ். படிப்பிற்கு கட்டண நிர்ணயக் குழு ஆண்டுக்கு ரூ.1.45 லட்சமும் வளர்ச்சி நிதியாக ரூ.5,000-மும் மட்டுமே வசூலிக்க வேண்டும் என நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த கல்லூரி பல்வேறு தலைப்புகளின் கீழ் கூடுதலாக மொத்தம் ரூ.20 லட்சம் வசூலித்ததாக மாணவி குற்றம் சாட்டியிருந்தார். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது என்று கூறிய நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் ரூ.6 லட்சம் திரும்ப வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 12 சதவீத வட்டி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், மாணவிக்கு எட்டு வாரங்களுக்குள் பட்டச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகத்திற்கும் ஆணையிட்டது.