tamilnadu

img

ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ஈரோடு, மே 13-ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் திங்களன்று ஆய்வு செய்தார்.ஈரோடு மாவட்டம், வேப்பம்பாளையம் ஏ.இ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 957 பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு பகுதியில் 43 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு மாணவ, மாணவிகளை அழைத்து வர 385வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் மேற்கு பகுதியில் உள்ள 10 பள்ளிகளில் 85 வாகனங்களும், பெருந்துறை பகுதியில் 41 பள்ளிகளைச் சார்ந்த 487 வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இவை 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்டவையாகும். பள்ளி வாகனங்களில் படிகட்டு, கதவு, அவசர கால வழி, முதலுதவிப்பெட்டி மற்றும் தீயணைப்புக் கருவி 2 வைக்கப்பட்டு இருக்க வேண்டும். புறநகர் பகுதியில் 50 கீ.மீ, நகரப் பகுதிகளில் 40 கி.மீ-க்கு மிகாமல் இயக்கும் வகையில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளின்படி வாகனங்கள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.