சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.எஸ்.ஜனார்த்தனம் காலமானார்.
ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் 1988-ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். அதன்பின், 2006-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியதாவது:
"ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன்.
நீதித்துறையின் மாண்பையும், சீரிய மரபையும் காத்துவந்தவர் என்பதுடன், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டுவருவதற்கான பரிந்துரையை அளித்த குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக இருந்த போது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார்.
நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.