சமூக சீர்திருத்தவாதி ஐயா வைகுண்டர் அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் கேரள அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வரவேற்றுப் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கன்னியாகுமரி மாவட்டம் கடந்த காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சொல்லொணா வகையில் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். சுவாமி விவேகானந்தர் இதன் காரணமாகவே அதை பைத்தியக்காரர்களின் தேசம் என அழைத்தார். இத்தகைய சூழ்நிலையில் ஐயா வைகுண்டர் எடுத்த சமூக சீர்திருத்தப் போராட்டங்களும் முயற்சிகளும் கேரளத்தின் முற்போக்கு செயல்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்திருந்தது.
தீண்டாமை, அணுகாமை, காணாமை என்று மிகவும் பிற்போக்கான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஐயா வைகுண்டர் மிகப்பெரிய கருத்துப்போரை நிகழ்த்தியவர். அவரது சமூக சீர்திருத்த மேம்பாட்டிற்கான பங்களிப்பை நினைவுகூறும் வகையிலும் இன்றைய தலைமுறையினருக்கு தாங்கள் கடந்து வந்த பாதையை நினைவூட்டி முன்னேறிச் செல்வதற்காக அவரது பணிகளை காட்சிப்படுத்தும் வகையில், ஐயா வைகுண்டர் அவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்க கடந்த பட்ஜெட்டில் கேரள இடது முன்னணி அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 28.02.2026 அன்று கேரள மாநில முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்கள் நினைவு மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டியிருக்கிறார்.
சமூக சீர்திருத்த வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் வகையிலான கேரள அரசின் இந்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது, பாராட்டுகிறது. கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கும், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
