திருநெல்வேலியில் நடைபெற்ற சாதி ஆணப்படுகொலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ததீஒமு-யின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், ஆசிரியை தமிழ்செல்வி தம்பதியரின் மகன் பொறியாளர் கவின்குமார் (28) சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த காவல்துறையில் பணியாற்றும் சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகள் மருத்துவர் சுபாசினி (சித்தா) இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
சாதிய ஆதிக்க உணர்வின் காரணமாக இதனை சகித்துக்கொள்ள முடியாத சுபாசினியின் தம்பி சுர்ஜித் 27.07.2025 அன்று கவினை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். ஐ.டி துறையில் வருமானம் பெறுகிற பொறியாளராக இருந்தாலும், அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்கிற காரணத்திற்காக கவின்குமாரை தனது சகோதரி திருமணம் செய்தால் தனது குடும்பத்தின் "சாதிப் புனிதம்" கெட்டுவிடும் என்கிற பிற்போக்குத்தனமான சிந்தனை தான் இப்படுகொலைக்கு காரணமாக இருக்கிறது. மதிப்புமிக்க இளம் உயிர்கள் தொடர்சியாக சாதி ஆணவப்படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது. இதனை வழக்கமான ஒரு செய்தியாக அரசும், சமூகமும் கடந்து செல்வதும் தொடர்கிறது.
இப்படுகொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் மீதான வழக்கை தகுதியான அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து விரைந்து நடத்தி சட்டப்படியான தண்டனையை உறுதி செய்திட வேண்டும். இக்கொடூரமான கொலை நடந்துள்ள பின்னணியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட தமிழக அரசு தனிச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.