ஏடிஎம் கட்டண உயர்வு டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரும் மே 1-ஆம் தேதி முதல், வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏ.டி.எம்-களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தாலோ, மெட்ரோ நகரங்களில் உள்ள மற்ற வங்கி ஏ.டி.எம்-களில் 3 முறைக்கு மேல் எடுத்தாலோ அல்லது மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள மற்ற வங்கி ஏ.டி.எம்-களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தாலோ வசூலிக்கப்படும் கட்டணம், ரூ.21-இல் இருந்து ரூ.23 ஆக உயர்த்த வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், ஏடிஎம் கட்டண உயர்வு டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.
ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.