பிளஸ் 2 பொதுத் தேர்வில் அறந்தாங்கி லாரல் பள்ளி சாதனை
அறந்தாங்கி, மே 10- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குரும்பக்காடு லாரல் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கே. ஜெயவாணி 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், டி.கயல்விழி 584 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், எஸ். மகதி 581 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர். மேலும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவர்களும், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்று பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர். பா. பாலசஞ்சீவி மற்றும் பள்ளி இயக்குநர் சகானா, தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
இருசக்கர வாகனம் மீது கார் மோதி தந்தை உயிரிழப்பு: மகள் காயம்
தஞ்சாவூர், மே 10- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் இளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பி. அருளரசு (52). ஒப்பந்ததாரரான இவர், தனது மகள் அட்சயாவை (15) அழைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூரிலிருந்து, கல்யாணபுரத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது,. இருசக்கர வாகனத்தின் மீது, அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருளரசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அட்சயா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.