587 பள்ளிக் கல்வி வாகனங்கள் ஆய்வு புதுகை ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை, மே 9- புதுக்கோட்டை மாவட்டத்தில் 587 பள்ளிக் கல்வி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், பள்ளிக் கல்வி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மு.அருணா பின்னர் தெரிவித்ததாவது:- ஆய்வில் வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப் பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவிப் பெட்டி, அவசரவழி, தீயணைப்புக் கருவி, ஓட்டுநர் சீருடை, படிக்கட்டுகள், கதவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், வேகக்கட்டுப்பாடு கருவி, மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை பகுதியில் 268, அறந்தாங்கி பகுதியில் 110, இலுப்பூர் பகுதியில் 133, ஆலங்குடி பகுதியில் 76 வாகனங்கள் என மொத்தம் 587 வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச்சீட்டினை ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு தகுதிச்சான்று தடை செய்யப்பட்டு, குறைகள் சரி செய்த பின்னரே மறுஆய்வு செய்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார். வருவாய் கோட்டாட்சியர்கள் ச.சிவக்குமார் (அறந்தாங்கி), அ.அக்பர்அலி (இலுப்பூர்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.