திருவனந்தபுரம்:
ஒவ்வொரு துறையிலும் பணியமர்த்தப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கையையும், அவர்கள் எந்தெந்த வழிகளில் பணியாற்றுவார்கள் என்பதையும் கணக்கிட்டு 100 நாட்களில் அரை லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வரலாற்று முடிவை முதல்வர் பினராயி விஜயன்அறிவித்தார்.
திருவனந்தபுரத்தில் வியாழனன்று கோவிட் பாதிப்பு குறித்த விவரங்கைள செய்தியாளர்களிடம் தெரிவித்த முதல்வர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அரசு மற்றும் அரசுபங்களிப்புள்ள நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் 18,600 பேருக்கு வேலை வழங்கப்படும். மேல்நிலைப் பள்ளிகளில் 425 புதிய பதவிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 700 பதவிகள் மற்றும் 300 தற்காலிக பதவிகள் உருவாக்கப்படும்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6911பதவிகளுக்கான நியமனங்கள் முறைப்படுத்தப்படும். நியமனம் பரிந்துரை பெற்றிருந்தாலும் பணியில் சேராத 1632 பேர் உள்ளனர். மொத்தத்தில், கல்வித்துறையில் 10,968 பேர் பணியாற்றுவர். மருத்துவக் கல்லூரிகளில் 700 பதவிகளும், பொது சுகாதார அமைப்பில் 500 பதவிகளும் உருவாக்கப்படும். கோவிட் முதல் வரிசைசிகிச்சை மையங்களில் 1,000 ஊழியர்கள்தற்காலிகமாக நியமனம் செய்யப்படுவர். பழங்குடியினரிலிருந்து 500 வனத்தறை ரோந்து (பீட்) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். சுகாதாரம், கல்வித் துறைகளைத் தவிர, பிற துறைகளில் 1717 வேலைகள் உருவாக்கப்படும்.
5000 நியமனங்களுக்கு பிஎஸ்சி
அரசு பணியாளர் தேர்வாணைம் (பிஎஸ்சி) மூலம் 100 நாட்களுக்குள் குறைந்தது 5,000 பேரை நியமிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து காலியிடங்களையும் உடனடியாக பிஎஸ்சி-க்கு தெரிவிக்க கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதி, சட்டம் மற்றும் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறைகளின் நிலைக்குழு அமைக்கப்பட்டு, நிலுவையில் உள்ள அனைத்து சிறப்பு விதிகளுக்கும் உரிய நேரத்தில் அங்கீகாரம் அளிக்கப்படும்.
வளர்ச்சி கழகங்களில் வேலைவாய்ப்பு
பிற்பட்டோர் மேம்பாட்டுக் கழகத்திற்குவழங்கப்பட்ட ரூ.650 கோடி கடன் உத்தரவாதத்தைப் பயன்படுத்தி, 100 நாட்களில் 3060 வேலைகள் உருவாக்கப்படும். 400 பெண் தொழில்முனைவோருக்கு உதவி, வெளிநாடுகளிலிந்து நாடு திரும்பிய 75 பேருக்கு கடன்களை திருப்பி செலுத்தல், 1125 பிற சுயதொழில் கடன் திட்டங்கள் மற்றும் 50 விதவைகளுக்கு உதவி உட்பட1660 தொழில்முனைவோருக்கு உதவிகள் வழங்கப்படும். இதன் மூலம் 3060 வேலைகள் உறுதி செய்யப்படும்.
மகளிர் மேம்பாட்டுக் கழகத்திற்கு ரூ.740கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. 1200 பேருக்கு சுய வேலைவாய்ப்பு கடன். 50 பழங்குடியின பெண்கள்மற்றும் 15 மூன்றாம் பாலினத்தினருக்கு கடன் வழங்கப்படும். 90 செவிலியர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய பயிற்சி பெற்றனர். இவற்றில் மொத்தம் 2920 வேலைகள். கேரள நிதிக் கழகம் மூன்று மாதங்களில் 500 தொழில்முனைவோருக்கு கடன்களை வழங்கும். இதன் மூலம் 2500 பேருக்கு வேலை கிடைக்கும்.கடலோர மேம்பாட்டுக் கழகத்தின் கீழ்மீன் பதப்படுத்தல், ஆன்லைன் சந்தைப்படுத்தல் முயற்சிகளில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு. பட்டியலின மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ.100 கோடியில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்செயல்படுத்தப்படும். இதி்ல் 100 நாட்களில் 1308 பேரை வேலைக்கு அமர்த்தலாம். ஊனமுற்றோர் நலக் கழகத்தின் கைவினைத் திட்டத்தின் கீழ் 7000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உள்ளன. இவை உடனடியாக மாவட்ட அளவிலான குழுக்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் அங்கீகாரம் அளிக்கப்படும். இதன் மூலம் குறைந்தது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ரூ.8,000 கோடி கடன்- மானியம்
தொழில்முனைவோர் திட்டங்கள் அரைலட்சம் மக்களுக்கு வேலை வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன. தொழில்முனைவோருக்கு குறைந்தபட்சம் ரூ.8000 கோடி கடன் மற்றும் மானியமாக வழங்கப்படும்.மாநிலத்தில் உள்ள 42 பொதுத்துறை நிறுவனங்களில், 1178 நிரந்தர நியமனங்கள், 342 தற்காலிக நியமனங்கள் மற்றும் 241ஒப்பந்த நியமனங்கள் உட்பட 1761 நியமனங்கள் இருக்கும். கேரள மாநில மின்னணுவியல் மேம்பாட்டுக் கழகத்தில் 241 நியமனங்கள் செய்யப்படும். கேரள கனிமங்கள்மற்றும் உலோகம், திருவிதாங்கூர் டைட்டானியம், கேரள மாநில ஜவுளி கழகம், கேரளமாநில மூங்கில் கழகம் மற்றும் கேரள மாநிலமருந்துகள் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் 766 நியமனங்கள் செய்யப்படும்.புதிய ஹோம்கோ தொழிற்சாலையில் 150 பதவிகள். கேஎஸ்எப்இ-யில் பிஎஸ்சி மூலம் 1000 பேருக்கும் நியமனம் அளிக்கப்படும். கூட்டுறவுத் துறை மற்றும் நிறுவனங்களில் 500 நிரந்தர மற்றும் தற்காலிக நியமனங்கள். கேராபெட்டின் ஆறு நிறுவனங்களில் 348 நியமனங்கள். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் இரண்டாவது காலாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரநிறுவனங்கள் குறைந்தது 2400 யூனிட்டுகளையும் 7200 வேலைகளையும் உருவாக்கும். கேரள எம்எஸ்எம்இ வசதிச் சட்டத்தின் கீழ் 4053 பேருக்கு சிறிய அளவிலான தொழில்களைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் குறைந்தது 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முந்திரியும் கயிறும்
முந்திரித் தொழிலில் 100 நாட்களில் கேபெக்ஸ் மற்றும் கார்ப்பரேஷன் 3,000புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும். கயறு துறையில் 100 இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்படும். குறைந்தது 500 புதிய வேலைகள் உருவாக்கப்படும். அடுத்த மூன்று மாதங்களில் உணவு பொருள் பைகள்விநியோகிக்க சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் மேலும் 2,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
கூட்டுறவு துறைக்கு ரூ.1000 கோடி
நெருக்கடி காலங்களில் கூட்டுறவுத்துறை மாநில அரசிற்கும் பொருளாதாரத்திற்கும் பலத்தை அளிக்கிறது என்று முதல்வர் கூறினார். கூட்டுறவுத் துறை17,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். முதன்மை கூட்டுறவு சங்கங்கள்அல்லது கேரள வங்கியின் கிளைகளால்தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டகடன்களின் அடிப்படையில் 13000 க்கும்மேற்பட்ட வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. நிறுவனங்களுக்கு கடன் வழங்க கூட்டுறவுத் துறைக்கு ரூ.1000 கோடி கடன் வழங்கப்படும்.100 தேங்காய் பதப்படுத்தும் பிரிவுகளில் 1000 பேர் பணியாற்றுவார்கள், 750 காய்கறி கொள்முதல் நிலையங்களில் 1500 பேர் பணியாற்றுவார்கள். நுகர்வோர் மத்திய வங்கி (1000), சந்தை மத்திய வங்கி (12), மகளிர் மத்திய வங்கி (174), ரப்பர் மார்க் (36), எஸ்சி / எஸ்டி பெட் (28) ஆகியவை 1250 வேலைகளை உருவாக்கும். மீன் பெட்டின் முயற்சிகளில் குறைந்தது 579 பேருக்கு வேலை கடைக்கும் என முதல்வர் கூறினார்.