tamilnadu

img

தமிழகம், புதுச்சேரியில் சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் (நவம்பர் 24,25) நடைபெறுவதாக இருந்த கணக்குத் தணிக்கையாளர் (சிஏ) தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெறுவதாக இருந்த சிஏ தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதற்குப் பதிலாக இந்த பகுதிகளில் மட்டும் இடைநிலைத் தேர்வுகள் டிசம்பர் 9 ஆம் தேதியும் இறுதித் தேர்வுகள் டிசம்பர் 11 ஆம் தேதியும் நடைபெறும். தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட செய்தி, மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிக்கப்படும். தேர்வெழுத ஏற்கெனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட் மாற்றப்பட்ட தேதியன்று நடைபெறும் தேர்வுக்கும் செல்லுபடியாகும்.
எனினும் மேற்குறிப்பிட்ட இடங்களைத் தவிர, பிற நகரங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் மற்றும் பட்டயக் கணக்காளர் தேர்வு அட்டவணையை www.icai.org என்ற இணைய தளத்தில் மாணவர்கள் அறிந்துக்கொள்ளலாம்.

;