வங்கிகளில் உரிமைக் கோரப்படாத பணம் டிஇஏ-வுக்கு மாற்றம்
பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.58,331 கோடி டெபாசிட் தொகையானது முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியத்துக்கு (டிஇஏ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 12 பொதுத்துறை வங்கிகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை மற்றும் முதிர்வடைந்த பிறகு பத்தாண்டுகள் வரை யாரும் உரிமை கோராத வைப்புத்தொகையும் இந்த நிதியத்துக்கு மாற்றப்படுகின்றன. அந்த வகையில் 2025 ஜூன் 30 நிலவரப்படி, எஸ்பிஐ வங்கியில் யாரும் உரிமை கோராத ரூ.19,330 கோடி டிஇஏ-க்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போல பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,911 கோடி, கனரா வங்கியில் ரூ.6,278 கோடி, பரோடா வங்கியில் ரூ.5,277 கோடி, யூனியன் வங்கியில் ரூ.5,105 கோடி ரூபாயும் டிஇஏ-நிதிய கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை தவிர, பேங்க் ஆப் இந்தியா ரூ.3,934 கோடி, இந்தியன் வங்கியில் ரூ.3,740 கோடி, ஐஓபி வங்கியில் ரூ.2,386 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.2,092 கோடி, யூகோ வங்கியில் ரூ.1,312 கோடி என உரிமை கோரப்படாத தொகை யும் டிஇஏ-க்கு மாற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 பொதுத் துறை வங்கிகளில் இருந்த ரூ.58,331 கோடி வைப்புத்தொகை டிஇஏ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
