states

தமிழ்நாடு என்ற வார்த்தையையே தவிர்க்கும் ஆளுநரின் அழைப்பிதழ்

மதுரை,ஜன.10-  ஜனவரி 12 வியாழக்கிழமையன்று சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் பெருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பிதழ் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு வெளியிட்ட அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்’என்று இருந்தது.இந்த ஆண்டு அழைப்பிதழில் ‘தமிழக ஆளுநர்’ என்று உள்ளது. மாநில இலச்சினையும் இல்லை. தமிழ்நாட்டிற்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் ஆளுநர் பேசுவதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது அரசியல் கட்சிகள்,பல்வேறு அமைப்புகள்,வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆளுநர் வெளியேறக்கோரி போராட்டத்தை துவக்கியுள்ளனர். இந்நிலையில் பொங்கல் அழைப்பிதழ் மூலம் கிளப்பியுள்ள புதிய சர்ச்சைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது  டிவிட்டர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலச்சினை மட்டுமே  இருக்கிறது. நமது இலச்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?  இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.