பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதத்திற்குள் நடைபெற உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் என்று கடந்த ஜூன் 24-ஆம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், வாக்காளர்கள் தேவையான ஆவணங்களை வழங்கினால், வாக்காளர் பதிவு அதிகாரி யின் சரிபார்ப்பு பணிகள் எளிதாக இருக்கும். ஒருவேளை தேவையான ஆவணங்களை நீங்கள் வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். இறுதியில் தேர்தல் பதிவு அதிகாரி முடிவெடுப்பார் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தைன் இந்த அறிவிப்புக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சூழலில், பீகாரில் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்க குடியுரிமைச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பொதுநல மனு ஒன்றை ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 19, 21, 325 மற்றும் 326 ஐ மீறுகிறது, மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 இன் விதி 21A ஆகியவற்றின் விதிகளை மீறுகிறது. மேலும், குறைந்த காலகட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் போது, 3 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, பியுசிஎல், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் மற்றும் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிரான இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.