பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து முறையாக பதிலளிக்க மறுத்துவிட்டு ஆபரேசன் சிந்தூரை விளம்பரத்திற்காக பயன்படுத்துவதாக சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டச் சொன்னோம். அரசு அதனை செய்யவில்லை. வழக்கம் போல் கூடுகிற மழைக்கால கூட்டத்தொடரிலும் விவாதப்பொருளில் அது சேர்க்கப்படவில்லை.
எதிர்கட்சிகளின் தீவிரமான போராட்டத்திற்கு பின்பே “பஹல்காம் தீவிரவாத தாக்குதல் - ஆப்ரேஷன் சிந்தூர்” குறித்து விவாதம் நடத்த அரசு ஏற்றுக்கொண்டது.
அந்த விவாதத்தில் கூட ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசினார்கள். பஹல்காம் தாக்குதல், அதில் உயிரிழந்தவர்கள், பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எல்லையோர மக்கள் குறித்து பா.ஜ.க. அரசு ஒரு வார்த்தை பேசவில்லை.
இந்திய ராணுவத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்க வேண்டுமோ அப்படிப் பயன்படுத்தவில்லை என்று நாங்கள் குற்றஞ்சாட்டினோம். தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் அறிவித்ததைப் பற்றி கேள்வி எழுப்பினோம். ஆனால் அது பற்றி எந்த பதிலும் சொல்லவில்லை.
பாகிஸ்தானுக்குள் 100 கிலோமீட்டர் நுழைந்து தாக்குதல் தொடுக்கப்பட்டதாக சொன்னது அரசு. அது சார்ந்த அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல பிரதமரால் மாநிலங்களவைக்கு வந்து சேர முடியவில்லை.
தொடர்ந்து ஆபரேசன் சிந்தூரைத் தனது விளம்பர வெறிக்காக மட்டுமே பயன்படுத்தி வரும் அரசு இன்று மேலும் ஒரு படி கீழிறங்கி மூத்த ராணுவ அதிகாரிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டுவந்து அமர்த்தியுள்ளது.
எப்படித் தாக்குதல் நடந்தது ? தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் யார்? எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்? பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு? என நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை பா.ஜ.க.வால் பதிலளிக்க முடியவில்லை. என சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்