india

img

என் தாய்மொழியில் பதவியேற்றது பெருமையே.... தேவிகுளம் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ராஜா....

கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள வழக்குரைஞரான ஏ. ராஜா, தனது தாய்மொழியான தமிழ்மொழியில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஏ. ராஜா ஆகிய நான்…
கேரளாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.இந்த நிலையில், கேரளாவின் 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வுடன் மே 24, திங்கட்கிழமையன்று தொடங்கியது.அப்போது நடந்து முடிந்த தேர்தலில், இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு 51 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழரான ராஜாவும் பதவியேற்றுக் கொண்டார்.

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7,848 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து நடைபெற்ற நடப்பு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் பதவியேற்ற ராஜா தமிழ் மொழியில் பதவியேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் ஏ.ராஜா அவர்கள் தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தாய்மொழியில்...
கேரள சட்டப்பேரவையில் தமிழ் மொழியில் பதவியேற்றது தொடர்பாக பேசிய ஏ. ராஜா, “திருப்பூர் - தேனி ஆகிய தமிழ்நாட்டின் மாவட்டங்களோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் மற்றும் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்ற தேவிகுளம் தொகுதியில் பிறந்து வளர்ந்த நான் என் தாய்மொழியாகிய தமிழ் மொழியில், வேறொரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் பதவியேற்றதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

தமிழ் மொழியில் பதவியேற்றதற்கான காரணம் என்னவென்று அவரிடம் கேட்டபோது, “தமிழ் மொழியில் பதவியேற்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட ஆர்வம். அதற்காக கேரள சட்டப்பேரவை செயலாளரிடம் முன்னரே விருப்பம் தெரிவித்து அனுமதியும் பெற்று விட்டேன். இதுமட்டுமின்றி, என் தொகுதியில் மலையாளம் பேசும் மக்களுக்கு ஈடான அளவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களும் உள்ளனர். அவர்களின் பிரதிநிதியாக தமிழ் மொழியில் பதவியேற்றது எனக்கு மகிழ்ச்சியே” என்று கூறினார்.

தனது பள்ளிக்கல்வி முதல் சட்டப்படிப்பு வரை முழுவதும் தமிழ் வழியிலேயே ராஜா பயின்றுள்ளார்.“நான் மட்டுமல்ல, என் பெற்றோரும் தேவிகுளத்தில்தான் பிறந்தனர். எனினும், எங்களது தமிழ் மொழியுடனான பிணைப்பு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக, நான் கேரளாவில் பள்ளிக்கல்வி முழுவதையும் தமிழ்வழியில்தான் படித்து முடித்தேன். இதைத்தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரில் சட்டம் பயின்றபோதும் தமிழில்தான் படித்தேன்” என்று பெருமைபட கூறுகிறார்.தேவிகுளம் தொகுதியில் வெற்றி சாத்தியமானதற்கான காரணம் குறித்து பேசிய அவர், “கடந்த ஐந்தாண்டுகாலமாக கேரளாவில் ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டே எனது தேர்தல் பிரச்சாரம் அமைந்தது” என்று கூறுகிறார்.

தேவிகுளம் தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் குறித்தும் அவற்றை தீர்ப்பதற்கு உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கிய ராஜா, “அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய என்னாலான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே என் முதன்மையான நோக்கம். ஏற்கனவே, எனது தொகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் பல்லாண்டுகால கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சிக் காலத்திலேயே பலருக்கும் 5 முதல் 10 சென்ட் நிலம் அரசால் வழங்கப்பட்டதுடன் வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டன. மேலும், அவர்களுக்கான ஓய்வூதியமும் அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற நலத்திட்டங்களை விவசாயிகள், பாமர மக்கள் என அனைத்துதரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதும், என் தொகுதிக்கு உட்பட பிரபல சுற்றுலாத்தலமான மூணாறில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு அதை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் என் பதவிக்காலத்தின் இலக்குகளாக இருக்கும்” என்று கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களான அந்தோணி லட்சுமண் - ஈஸ்வரி தம்பதிக்கு 1984ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ராஜா மகனாக பிறந்தார். கேரள சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் கோயம்புத்தூர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞராக இருந்து வருகிறார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இடுக்கி மாவட்ட பொருளாளராகவும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். 2009 முதல் தேவிகுளம் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராஜா, 2018 முதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நன்றி : பிபிசி தமிழ்