டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளது.
அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டிசம்பர் 3 இயக்கமானது மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக தமிழகம் முழுக்க களமாடிவரும் முன்னணி அமைப்பாகும். எங்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை உண்மையாக்கி வரும் ஒரு முன்னணி அமைப்பாகும்.எங்கள் அரசியல் நிலைப்பாடு குறித்த கலந்தாய்வு, 20 மாவட்ட இணைப்பு சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் 21-03-2021 அன்று நடந்தது.மாவட்ட கள நிலவரங்கள் குறித்த புள்ளி விவரங்களுடன் மாவட்ட பொறுப்பாளர்கள் விவரங்களை எடுத்துரைத்தனர், அவையனைத்தும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கை ஆய்வுக்கு பிறகு, மூன்று காரணிகளான அதாவது
தேர்தல் அறிக்கைகள், கள அனுபவம், எளிதில் அணுகும் தன்மை(Accessibility), மற்றும் 30.11.2018 அன்று நடந்த அரசியல் மாநாட்டில் மாநில அரசியல் கட்சிகள் கையொப்பமிட்ட “சென்னை பிரகடனத்தினை” அடிப்படையாக கொண்டு ஆதரவு நிலைப்பாட்டை கருத்தில்கொண்டு இன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர்கள் அரங்கத்தில் ஊடங்கங்கள் முன்னிலையில், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் தங்கள் நலன்களை பாதுகாக்க வேண்டுமென்றால் மக்கள் நலம் நாடும் அரசு தான் தேவை என்ற முடிவுக்கு வர முடியும்.
தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வென்றெடுக்க நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும் என்று உரிமையுடன், அரசியல் தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களின் முன்னிலையில் இத்தேர்தலில் ஆதரவு அளிப்பது என்று டிசம்பர் 3 இயக்கம் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.