districts

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம்

திருவாரூர், ஜன.11-  பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்ட சீரியத் திட்டம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்.  இத்திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது, அப்பெண் குழந்தைக்கு ரூ.50,000-க்கான வைப்புத் தொகை ரசீதும், இரண்டு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ25,000 வீதம் வைப்புத் தொகை ரசீது வழங்கப்பட்டு வருகிறது. 18-வயது முதிர்வடையும் போது இத்தொகையினை வட்டியுடன் பெற்று பயன்பெறலாம்.  திருவாரூர் மாவட்டத்தில், வைப்புத்தொகை ரசீதுகள் பெற்று, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் நாளது தேதி வரை முதிர்வு தொகை பெறாதவர்களுக்காக திருவாரூர், கொரடாச்சேரி, மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜன.12, ஜன.14 மற்றும் ஜன.19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே அந்ததந்த ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசித்து வைப்புத்தொகை ரசீது பெற்றவர்களும் தற்போது வசிப்பிடம் மாறி உள்ளவர்களும் மேற்படி முகாமில், சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் முதிர்வு தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முகாமின்போது, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வைப்புத் தொகை ரசீது நகல், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், வங்கி கணக்கு முன் அட்டை நகல், (இரசீதிலும் வங்கி கணக்கிலும் ஒரே பெயராக இருத்தல் வேண்டும்) பெயரில் சிறு மாற்றங்கள் இருப்பின் நோட்டரி பப்ளிக் சான்றும், முழு பெயர் மாற்றம் இருப்பின் அரசிதழ் நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.