கோவை மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள்வரை சிறை தண்டனை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:
கோவையில் 2025 நவம்பர் மாதத்தில் கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், கோவை மகளிர் நீதிமன்றம் மூன்று பேரை குற்றவாளிகளிகள் என உறுதி செய்து ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பை வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பர் 2 தேதியன்று கல்லூரி மாணவி தன் நண்பருடன் இருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களைத் தாக்கி, மாணவியை கோவை விமான நிலையம் அருகே உள்ள பகுதிக்கு கடத்திச் சென்று கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொடூரச் சம்பவம் வெளிவந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலுவான கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியது.
இதன் பிண்ணனியில், கோவை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளிகள் சதீஷ், கார்த்திக் (வயது 21), தவசி (வயது 20), மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்து துரித விசாரணையை தொடங்கியது. விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் காவல்துறையால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி வி. சுந்தரராஜ், மூன்று குற்றவாளிகளையும் பாரதிய நியாய சன்ஹிதா (க்ஷசூளு) பிரிவு 70(1) கும்பல் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என உறுதி செய்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். க்ஷசூளு பிரிவு 70(1)ன் கீழ் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயுள் முழுவதும் சிறை என்றும் தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 இலட்சமும், புகார் அளித்தவருக்கு ரூ.2 இலட்சமும் இழப்பீடாக வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. வழக்கை வெற்றிகரமாக நடத்திய அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி. ஜிஷா அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
72 நாட்களில் விசாரணையை முடித்து, மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இத்தீர்ப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இச்சூழலில் காவல்துறையினரின் உடனடி நடவடிக்கை, திறமையான விசாரணை மற்றும் நீதித்துறையின் விரைவான தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இவ்வழக்கில் மிக மோசமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி உறுதியுடன் நீதிக்காகப் போராடியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. இது எவ்வித சமூக அழுத்தங்களுக்கும் உட்படாமல் அநீதிக்கு எதிரான போராட்டத்தை துணிச்சலுடன் நடத்தியது, நீதிக்காக போராடும் பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதாகும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமூகத்தில் பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தும் நிலையில், நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரித்திட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு, காவல்துறை, நீதித்துறை ஒருங்கிணைந்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
