கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதிகளில் வழங்கப்படும் தரமற்ற உணவால் மாணவிகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், அனைத்து விடுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு நடத்தக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதிகளில் அண்மைக்காலமாக உணவு பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. நேற்று முன்தினம் (பிப்.18) கோவை அபிராமி கல்லூரியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை உட்கொண்ட 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும், மூன்று வாரங்களுக்கு முன்பு கங்கா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளும் தரமற்ற உணவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து இந்திய மாணவர் சங்க கோவை மாவட்டத் தலைவர் பாவேல் மற்றும் மாவட்டச் செயலாளர் அகமது ஜூல்ஃபிகர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், தனியார் கல்லூரி விடுதிகளில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், கல்லூரிகளின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குத் தங்களுக்குச் சொந்தமான மருத்துவமனைகளிலேயே சிகிச்சை அளித்து இந்த விவகாரத்தை நிர்வாகங்கள் மூடி மறைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மாணவிகளின் உடல்நலத்தில் அலட்சியம் காட்டும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, கோவையில் உள்ள அனைத்து தனியார் கல்லூரி விடுதிகளிலும் உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு நடத்தி, உணவு மற்றும் குடிநீர் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, மாணவர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட (RO) குடிநீர் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயமாக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோவை மாவட்டக் குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
