districts

img

முன்னாள் அமைச்சரிடம் நூதன முறையில் ரூ.87,000 மோசடி: போலீஸார் விசாரணை

புதுச்சேரி,அக்.2-  புதுவை மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சரிடம் மர்ம நபர்கள் நூதன முறையில் ரூ.87,326 மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் ஷாஜகான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் தன்னை குறிப்பிட்ட தனியார் வங்கி அதிகாரி எனக் கூறியுள்ளார். அத்துடன் முன்னாள் அமைச்சரின் கிரெடிட் அட்டையில் வங்கிக் கடன் தொகையை அதிகப்படுத்துவதாகக் கூறியுள்ளார். அதனையடுத்து முன்னாள் அமைச்சரின் வங்கி விவரத்தைப் பெற்றவர், அவருக்கு வந்த ஓடிபி எண்ணையும் கேட்டு பெற்றுள்ளார். அதன்பிறகு திடீரென முன்னாள் அமைச்சரின் கிரெடிட் அட்டையின் கணக்கிலிருந்து ரூ.87,326 மர்ம நபரால் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சர் புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இணையவழியில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மர்ம நபர்கள், அதன்படி சில இணைய வழி புதிர்களுக்கு விடையளிக்கச் செய்து புதுச்சேரி சேதராப்பட்டு முத்தமிழ் நகரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் ரூ.1 லட்சமும், முதலியார் பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் ரூ.4.33 லட்சத்தையும் மோசடி செய்தது குறித்தும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.