திருவண்ணாமலை, அக்.27 – நீதிமன்ற கட்டிடத்தை உடனே கட்டி முடிக்க வேண்டும், என, கலசபாக்கம் சிபிஎம் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் கலசபாக்கம் வட்டார 7 ஆவது மாநாடு ஞாயிறு அன்று (அக்.27) விண்ணுவாம்பட்டு பகுதியில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை கே.கே.வெங்கடேசன் ஏற்றி வைத்தார். டி.சரவணன் வரவேற்றார், எம்.பழனி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஏ.திருமுருகன், தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசினார். வேலை அறிக்கையை வட்டார செயலாளர் பி.சுந்தர் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் நிறைவுரையாற்றினார். இடைக்குழு தேர்வு 11 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக பி.சுந்தர் தேர்வு செய்யப்பட்டார். தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் கலைக்கல்லூரியை மாதிமங்கலத்தில் உடனே துவக்கிட வேண்டும், மேல்சோழங்குப்பம் முதல் சிறுவள்ளூர், மாதிமங்கலம் வழியாக கலசபாக்கத்திற்கு அரசு நகர பேருந்து இயக்க வேண்டும், கலசபாக்கத்தில் நீதிமன்ற கட்டிடத்தை உடனே கட்டி முடிக்க வேண்டும், கலசப்பாக்கம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், கலசப்பாக்கம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சர்தார் நன்றி கூறினார்.