சென்னை, செப். 20- சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்களும் குறைந்தளவே வந்தனர். இதன் காரணமாக வியாபாரம் இல்லாமல் காய்கறிகளின் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 25க்கும், தக்காளி 20க்கும், உருளைக்கிழங்கு 17க்கும், கேரட் 30க்கும், பீன்ஸ் 25க்கும், பீட்ரூட் முள்ளங்கி ஆகியவை 15க்கும், சவ்சவ், வெண்டைக்காய், புடலங்காய், சுரக்காய் 10க்கும் முட்டைகோஸ் 5க்கும் கத்திரிக்காய் 15க்கும் காராமணி, பாகற்காய் மற்றும் காலிபிளவர் 20க்கும், சேனைக்கிழங்கு 40க்கும், முருங்கைக்காய் 30க்கும், நூக்கல், கொத்தவரங்காய் 25க்கும், கோவைக்காய் 12க்கும் விற்பனை செய்யப்பட்டது.