மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த தீர்ப்பை அடுத்து விளக்கம் கேட்டு ஜனாதிபதி அனுப்பிய குறிப்பு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என முதன்முறையாக ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம். இதை அடுத்து, ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பினார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இவ்வழக்கில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த சூழலில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் குறிப்பை ஆதரிக்கும் தரப்பு மனுக்கள் ஆகஸ்ட் 19, 20, 21, 26 ஆகிய தேதிகளிலும், எதிர்க்கும் தரப்பு மனுக்கள் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 2, 3 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்குள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.