மாஸ்கோ, ஜூலை 25- ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையில் இருதரப்பு உச்சி மாநாட்டை மீண்டும் நடத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா-ஆப்பிரிக்காவின் முதல் உச்சி மாநாடு ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பொருளாதாரக் கழகத்தின் கூட்டமும் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு பல ஆப்பிரிக்க நாடுகளுடன் பொருளாதார உறவில் வளர்ச்சி ஏற்பட்டது. அதை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 2023-ஆம் ஆண்டில் இரண்டாவது உச்சி மாநாட்டை நடத்தவிருக்கிறார்கள். இதுகுறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ‘‘ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுக்கு முன்னுரிமை தருவதே எங்களின் வெளியுறவுக் கொள்கையாகும். இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில் உறவை வளர்க்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் இரண்டாவது உச்சி மாநாட்டை நடத்தப் போகிறோம். மாநாட்டை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி ஆப்பிரிக்க நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது’’ என்றார். மேலும் பேசிய அவர், ‘‘இரு தரப்பு சந்தைகளிலும் ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை மேலும் நெருக்கமாகக் கொண்டு வருவதே நமது இலக்காகும். பெரும் முதலீட்டுடன் கூடிய கட்டுமானத் திட்டங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.