world

img

வெனிசுலா ஜனாதிபதி தேர்தல்: ஞாயிறன்று வாக்குப்பதிவு

கராகஸ்,ஜூலை 26 - ஜூலை 28 ஞாயிற்றுக்கிழமை வெனிசுலாவின் 6 ஆவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 4 மற்றும் 5 ஆவது தேர்தல்களில் வெற்றியடைந்த இடதுசாரி ஜனாதிபதி மதுரோ இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி வேட்பாளராக களம் காண்கிறார்.  வெனிசுலா புரட்சியை வழி நடத்திய ஹியூகோ சாவேஸை அமெரிக்கா கொலை செய்த பிறகு மீண்டும் அங்கு இடதுசாரிகள் எழுச்சி ஏற்பட்டு விடக்கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டின் அரசியலில் தலையிட்டு பல அழுத்தங்களை உருவாக்கி வருகின்றன.  அமெரிக்க கூட்டணி நாடுகளால் வெனிசுலா மீது 900 க்கும் அதிகமான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தற்போதைய ஜனாதிபதி மதுரோவை பல முறை கொலை செய்யவும் முயன்றுள்ளது. இடதுசாரிகள்  தலைமையிலான வெனிசுலாவை அமெரிக்கா எப்படியெல்லாம் முடக்குகிறது என்பது குறித்து செய்தி வெளியிடாமல் இந்த ஊடகங்கள் மறைத்து விடுகின்றன. வெனிசுலாவின் உண்மை நிலையை மூடி மறைக்கின்றன என மதுரோவே தேர்தல் பிரச்சாரங்களின் போது குற்றம் சாட்டியுள்ளார். வெனிசுலா மீதான பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்தியதுடன் அந்நாட்டின் அரசியல் சூழலில் குழப்பத்தை ஏற்படுத்தி  இடதுசாரிகள் மீதான அதிருப்தியை  உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை வலதுசாரிகளிடம் ஒப்படைக்கும் வேலையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில் 25 ஆண்டுகளாக நடந்து வரும் பொலிவியப் புரட்சியை பாதுகாக்க ஒன்றுபட்ட இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கி வரும் மதுரோ அமெரிக்காவின் சதிகளை முறியடித்து நாட்டின் இறையாண்மை , ஜனநாயகத்தை பாதுகாக்க தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த தேர்தலில் மதுரோவிற்கு எதிராக தீவிர வலதுசாரியான  எட்மண்டோ கோன்சாலஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவியை இடதுசாரிகள் வசம் தக்கவைத்துக் கொள்ள  அனைத்து மக்களின் சக்திகளையும் ஒன்றிணைத்து  ஒரு புதிய அரசியல், சமூக மற்றும் கலாச்சாரப் பெரும்பான்மையை உருவாக்கியுள்ளதாக மதுரோ தெரிவித்துள்ளார்.