பனிப்போருக்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக்கூட்டணி தனது படைகளின் எண்ணிக்கையை எட்டு மடங்கு அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
உலகிலேயே பெரிய ராணுவக்கூட்டணி என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் நேட்டோவின் உச்சிமாநாடு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெறுகிறது. நேட்டோவில் இருக்கும் 30 உறுப்பு நாடுகளும் பங்கேற்க உள்ளன.
நேட்டோ படை எண்ணிக்கை அதிகரிப்பு.
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி, சீனாவின் வளர்ச்சி, ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு உறுப்பினர் அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றி இதில் பேசப்போகிறார்கள். ரஷ்யா மற்றும் உக்ரைன் நெருக்கடியில் அனைத்து 30 நாடுகளுமே உக்ரைனுக்கு ஆதரவான நிலையை எடுக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தகவலை நேட்டோவின் பொதுச் செயலாளர் ஸ்டோல்டன்பெர்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "நேட்டோவில் தற்போது 40 ஆயிரம் படைவீரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 3 லட்சத்திற்கும் மேலாக அதிகரிக்கத் திட்டம் இருக்கிறது. சில கூட்டணி நாடுகளில் படைகளை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அவற்றில் சில நாடுகள் ரஷ்யாவால் தங்களுக்கு நேரடியான ஆபத்து இருப்பதாகக் கூறியிருக்கின்றன. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உறுப்பு நாடுகளாக சேருவது பற்றி துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசவிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
2006 ஆம் ஆண்டில் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காட்டை ராணுவத்திற்காகச் செலவிட வேண்டும் என்ற முடிவை நேட்டோ எடுத்தது. இதைப் பல நாடுகள் செய்யவில்லை. ஆனால் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் நெருக்கடியால் அனைத்து உறுப்பு நாடுகளும் 2 விழுக்காடு என்பதை எட்டுகின்றன. ஜெர்மனி தனது செலவைப் பல மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.நேட்டோ கூட்டணியில் உக்ரைன் சேருவிதில் சிக்கல்கள் இருப்பதால் அந்நாட்டின் ராணுவத்தைப் பலப்படுத்துவதே இலக்காக இருக்க வேண்டும் என்று பல நேட்டோ நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
மாட்ரிட்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக்கூட்டணியின் உச்சி மாநாடு நடப்பதைக் கண்டித்து கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஏற்பாடுகளைச் செய்திருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பைத் பதிவு செய்தனர்.உள்ளூரில் தொழிலாளர்கள் விரோதக் கொள்கையைக் கடைபிடித்து, நேட்டோ மாநாட்டிற்கான ஏற்பாடுகளை உற்சாகமாகச் செய்வதில் இருந்து ஸ்பெயின் அரசாங்கள் யார் பக்கத்தில் இருக்கிறது என்பதைக் காட்டி விட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.