பத்திரிகையாளர் ராணா அயூப்பிற்கு அமெரிக்க ஜனநாயக கட்சியின் செனட்டர் பேட்ரிக் லீஹி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தி வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரையாளராக பணியாற்றி வருபவர் பத்திரிகையாளர் ராணா அயூப். முன்னதாக, `தெஹல்கா' புலனாய்வு மற்றும் அரசியல் இதழில் பணியாற்றியபோது, பா.ஜ.க, மோடி, அமித்ஷா குறித்த விவகாரங்களில் ராணா அயூப் வைத்த குற்றச்சாட்டுகளும், புலனாய்வுக் கட்டுரைகளும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தொண்டு என்ற பெயரில் இவர் பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியை பணமோசடி செய்ததாகவும், தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்காக அந்தப் பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றியதாகவும் அமலாக்க இயக்குநரகம் 1.77 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரின் சொத்துகளை முடக்கி அவரை விசாரணைக்கு உட்படுத்தியது.
அப்போது ராணா அயூப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெண் வெறுப்பையும், இணையத்தில் மதவெறி தாக்குதல்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டது. அவர் மீதான நீதித்துறை தாக்குதல்களையும் விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் தலைவர் செனட்டர் பேட்ரிக் லீஹி வெளியிட்டுள்ள அறிக்கையில்
பத்திரிகையாளர் ராணா அயூப் மத வன்முறை, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் இந்தியாவில் பொது நலன் சார்ந்த பிற விஷயங்களை தைரியமாக பதிவு செய்தார். தன் வேலையின் நோக்கம் மற்றும் நாட்டின் மீதான பற்று அது நிற்கும் லட்சியங்கள் மீது கொண்ட அன்பால் இயங்கி வருகிறார்.
கடந்த 2022ல் சுமார் 38 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 294 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 64 பேர் பணியின்போது காணாமல் போயுள்ளனர். கணக்கில் அடங்காத பயமுறுத்தல்கள், தாக்குதல்கள், சட்டரீதியாக வழக்கு பதிவு செய்தல் மற்றும் மிரட்டல்களை சந்திக்கின்றனர். இந்நிலையில் இந்த செனட் சபை பத்திரிகை சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அந்த வகையில் எந்த வித அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் இயங்கி வரும் பத்திரிகையாளர் ராணா அயூப்பிற்கு துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.