காசாவில் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்து வரும் பத்திரிகையாளர் முகம்மது அபு தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள இஸ்ரேல், தொடர்ந்து ஆக்கிரமிப்பை விரிவாக்கம் செய்யும் வகையில் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையால், காசாவில் கடும் பஞ்சம் நிலவுகிறது. ஐ.நா போன்ற அமைப்புகளின் நிவாரண பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் மறுத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற தொண்டு நிறுவனம் மட்டுமே காசாவில் தற்போது உணவுகளை வழங்கி வருகிறது.
இதனிடையே காசாவில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாட்டால் குடிமக்கள் மட்டுமின்றி பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் பணிபுரிந்துவரும் பத்திரிகையாளர் முகம்மது அபு வோன், லிங்டுஇன் சமூக வலைதளப் பக்கத்தில் உணவுக்காக தனது புகைப்படக் கருவியையும், பாதுகாப்பு உபகரணத்தையும் விற்பனைக்கு அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர். நான் எனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்க இருக்கிறேன் அதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்துக்குமான உணவை என்னால் வாங்க முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ், ஸ்கை நியூஸ், ஏபிசி நியூஸ் என சர்வதேச ஊடகங்கள் பலவற்றுக்கு பணியாற்றியுள்ள முகம்மது இவ்வாறு பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.v