world

img

பற்றி எரியுமோ வளைகுடா? பதறும் உலகம்  பரிகசிக்கும் டிரம்ப் - அ . அன்வர் உசேன்

பற்றி எரியுமோ வளைகுடா? பதறும் உலகம்  பரிகசிக்கும் டிரம்ப்

பாலஸ்தீனம், லெபனான், ஏமன், சிரியா ஆகிய தேசங்களை தாக்கி  வரும் இஸ்ரேல் தனது தாக்குதலின் எல்லையை விரிவுபடுத்தி ஈரான் மீது போர் தொடுத்துள்ளது. ஈரானை தாக்கி அழிக்க வேண்டும் என்பது இஸ்ரேலின் 30 ஆண்டு கால  கனவு திட்டம். எனினும் ஈரானின் எதிர் தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் விளைவுகளை உருவாக்கி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா  போரில் ஈடுபடும் என பரவலான செய்திகள் உள்ளன. அமெரிக்கா போரில் ஈடுபட்டால் வளைகுடா பற்றி எரியும் ஆபத்து உள்ளது. இதன் பாதிப்பு எண்ணெய் உற்பத்தியிலும் பிரதிபலித்து இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார பாதக விளைவு களை உருவாக்கும்.

ஈரானும் பாலஸ்தீனமும்

இஸ்ரேல்-ஈரானின் போருக்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன:

1. பாலஸ்தீனத்துக்கு ஈரான் தரும் ஆதரவு

2.ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகள்

இஸ்லாமிய நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு எவ்வித சமரசமும் இல்லாமல் ஆதரவு அளித்து வரும் நாடு ஈரான்தான். பாலஸ்தீன மக்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். எனினும் சவூதி அரேபியா, குவைத், பகரைன், கத்தார், அரபு அமீரகம் போன்ற எந்த சன்னி பிரிவு இஸ்லாமிய நாடும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை எதிர்கொள்ள முன்வரவில்லை. மாறாக அமெரிக்க உதவியுடன் இஸ்ரேலுடன் சமரசம் செய்து கொண்டன. சில நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவும் செய்தன. இத்தகைய சூழலில் ஈரான் ஒரு ஷியா பிரிவு நாடாக இருந்த போதிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தந்தது. வளைகுடா பகுதியில் இஸ்லா மிய சன்னி பிரிவு நாடுகளுக்கும் ஷியா பிரிவு நாடுகளுக்கும் உள்ள முரண்பாடின் வெளிப் பாடாகவும் இது அமைந்தது. வளைகுடாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவ சவூதி ஒரு புறமும் ஈரான் மறு புறமும் முயன்றன. ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதி போன்ற அமை ப்புகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக “எதிர்ப்பு அச்சாணி” உருவாக்கப்பட்டது. இதற்கு ஈரான் வலுவாக உதவி செய்து வந்தது. அசாத் தலைமையிலான சிரியாவும் உதவியது. ஒரு கட்டத்தில் சவூதி அரேபியா இஸ்ரேலை அங்கீகரிக்க முடிவு செய்த பொழுதுதான் அதனை தடுக்க ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. ஏனெனில் சவூதி இஸ்ரேலை அங்கீகரித்த பின்னர் அநேகமாக பாலஸ்தீன விடுதலை எனும் பிரச்சனையே நிரந்தரமாக பின்னுக்கு போகும் ஆபத்து இருந்தது. எந்த ஒரு இஸ்லாமிய நாடும் இஸ்ரேலை எதிர்கொள்ள துணியாத காரணத்தாலும் அமெரிக்கா எல்லையின்றி இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி வருவதும் பல மேற்கத்திய நாடுகள் சியோனிஸ்டுகளுக்கு வான் உளவு உட்பட பல உதவிகள் செய்து வரும் பின்னணி யில் இஸ்ரேலின் மூர்க்கத்தனம் பன்மடங்கு அதிகரித்தது. இஸ்ரேலையும் அமெரிக்காவை யும் கடிவாளம் போட துரதிர்ஷ்டவசமாக சோவி யத் யூனியன் இன்று இல்லை. இஸ்ரேலை கடு மையாக எதிர்க்கும் கியூபா, சிலி, வெனிசூலா போன்ற தேசங்களுக்கு ராணுவ பலம் இல்லை. ராணுவ பலம் உள்ள ரஷ்யா உக்ரைன் போரி லும் சீனா தைவான், பிலிப்பைன்ஸ் பிரச்சனை யிலும் சிக்கியுள்ளன. எனவே சீனாவும் ரஷ்யா வும் மறைமுக உதவிகள்தான் செய்ய முடிந்ததே தவிர நேரடி உதவிக்கு வர இயலவில்லை. ஆனால் அதன் இன்னொரு விளைவாக 50,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள்  மட்டுமின்றி கணிசமான லெபனான் மற்றும் ஏமன் மக்களும் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ்  அழிக்கப்படவில்லை என்றாலும் பலவீனப் பட்டுள்ளது. ஹிஸ்புல்லா கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. எதிர்பாரா விளைவாக அசாத் ஆட்சி இழந்து சிரியாவில் பழைய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் புது வடிவ ஆட்சி அமைந்துள்ளது.  

ஈரானும் அணு ஆயுதமும்

இஸ்ரேல் அணு ஆயுதங்களை பெற்றுள் ளது. ஆனால் வெளிப்படையாக அதனை சொல்வது இல்லை. அமெரிக்கா உட்பட அனைத்து மேற்கத்திய தேசங்களுக்கும் இது தெரியும். ஆனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அவர்கள் வாய் மூடி மவுனிகளாக உள்ளனர். இந்த சூழலில்தான் தனது பாதுகாப்புக்காகவும் இஸ்ரேலை மிரட்டுவதற்கும் அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் கவனம் செலுத்தியது. அதற்கு முன்னோட்டமாக அணு மின் தயாரிப்புக்காக உலைகளை அமைத்தது. அதில் யுரேனியம் எனும் அணு ஆயுதத்துக்கு பயன்படும் பொருள் செறிவூட்டப்படுகிறது. இஸ்ரேல் அணு ஆயுதங்களை கைக் கொண்ட பொழுது கள்ள மவுனம் காத்த மேற் கத்திய நாடுகள் ஈரானின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஈரான் மீது பல வர்த்தக தடைகளை விதித்தன. ஈரானின் எண்ணெயை எந்த தேசமும் கொள்முதல் செய்யக் கூடாது என மிரட்டின. இது ஈரானின் பொருளாதாரத்தை பாதித்தது. இதன் பின்னணியில் அணு ஆயுதம் குறித்து பேச்சு வார்த்தைகளுக்கு ஈரான் முன் வந்தது. தான் அணு ஆயுதங்கள் தயாரிக்க போவது இல்லை எனும் வாக்குறு தியை கொடுத்தது. தனது அணு பயன்பாடு என்பது மின்சாரம் தயாரிக்கும் போர் அல்லாத அமைதி வழிகளுக்கு மட்டுமே பயன்படும் எனவும் வாக்குறுதி அளித்தது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அணு சக்தி முகமை யின் ஆய்வுகளுக்கு தன்னை உட்படுத்தி கொள்ள சம்மதம் தெரிவித்தது. ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு சர்வதேச அணு சக்தி முகமை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து  ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என உறுதி செய்தது. இதன் ஒரு பகுதியாக ஈரான் மீதான சில தடைகள் விலக்கி கொள்ளப்பட் டன. இந்த ஒப்பந்தத்தை சீர்குலைத்தது முதல் டிரம்ப் ஆட்சிதான். தனது அடியாள் இஸ்ரே லுக்காக இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா தன்னி ச்சையாக குப்பைத் தொட்டிக்கு அனுப்பியது.  

அமெரிக்கா சீர்குலைவு அணுகுமுறை

ஈரானுடன் இரண்டவது டிரம்ப் ஆட்சி பேச்சு வார்த்தைகளை துவக்கியது. ஈரான் மின்சாரம் மற்றும் அமைதி பணிகளுக்காக யுரேனியம் 3.5% செறிவூட்டலுக்கு அனுமதி கோரியது. ஆனால் அமெரிக்கா 1% செறிவூட்டலுக்கும் அனுமதிக்க முடியாது என நிலை எடுத்தது. எனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையை அடைந்தன. 6ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஓமனில் 15.06.2025 நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 13.06.2025 அன்று இஸ்ரேல் ஈரான்  மீது குண்டு மழை வீசியது. ஈரானை பேச்சுவார்த்தைகள் என சொல்லி அமெரிக்கா ஏமாற்றியது எனவும் பேச்சு வார்த்தைகளின் பொழுதே இஸ்ரேலின் தாக்குதலுக்கு பச்சை  கொடி காட்டப்பட்டது எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். டிரம்பின் பல ரவுடித்தன மான மிரட்டல்கள் அதனை உறுதிப்படுத்து வதாக உள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என அமெரிக்க நாடாளு மன்ற குழுவிடம் உளவு அமைப்பு தலைவர் துளசி கப்பார்டு கடந்த மார்ச் மாதம்தான் பகிரங்க மாக வாக்கு மூலம் கொடுத்தார். ஆனால் இன்று துளசி கப்பார்டின் மதிப்பீடு பற்றி நான் கவலைப்படவில்லை எனவும் ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் அருகில் உள்ளது எனவும் டிரம்ப் கூறுகிறார்.

ஈரானின் வலுவான பதிலடி

முதல் தாக்குதலில் நிலைகுலைந்து போன ஈரான் தன்னை சுதாரித்துக் கொண்டு வலுவான எதிர்தாக்குதலை தொடுத்துள்ளது. இத்தகைய தாக்குதலை இஸ்ரேல் இதுவரை கண்டது இல்லை. டெல் அவிவ், ஹஃபியா  போன்ற நகரங்களில் உள்ள பல ராணுவ அமைப்புகள் துல்லியமாக தாக்கப்படு கின்றன. இஸ்ரேலிய மக்கள் முதல் தடவையாக  இரவுகளில் பாதாள அறைகளில் தஞ்சமடை ந்துள்ளனர். தாக்குதல் பற்றிய செய்திகள் வெளி யிட்டால் ஆயுள் தண்டனை என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. எவரும் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது எனவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இஸ்ரேலின் விமான நிலையங் கள் முடங்கியுள்ளன. ஈரானும் பல பாதிப்பு களை சந்தித்து வருகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்டது பழைய ஏவுகணைகள்தான்! நவீன ஏவுகணைகள் தயாராக உள்ளன என ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாத இஸ்ரேல் போரில் தனக்கு ஆதரவாக ஈடுபடு மாறு அமெரிக்காவை நிர்பந்தித்து வருகிறது.  

அமெரிக்க மக்கள் எதிர்ப்பு

அமெரிக்க மக்களில் 61% பேர் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக போரில் ஈடுபடுவதை விரும்ப வில்லை என ஆய்வுகள் வெளிப்படுத்து கின்றன. எனினும் அமெரிக்கா போருக்கு தயாராகி வருவதாக பல அறிகுறிகள் வெளிப்படுகின்றன. அமெரிக்கா போரில் இறங்கினால் வளைகுடா முழுவதும் கடும் பாதிப்புகள் ஏற்படும். எண்ணெய் விலை உயரும். பல உயிர்கள் பறிபோகும். எனினும் ஏகாதிபத்தியம் மனித குலத்தை பற்றி எப்பொழுது கவலைப்பட்டுள்ளது?