காசாவில் ஒரே நாளில் இஸ்ரேல் ராணுவம் 5 பத்திரிகையாளர்களை படுகொலை செய்துள்ளது. ஜூலை 7 அன்று காசாவின் பல இடங்களில் நடைபெற்ற இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் போர் துவங்கியதில் இருந்து தற்போது வரை இஸ்ரேல் ராணுவத்தால் நேரடியாக படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது.
1992க்குப் பிறகு அதாவது 32 ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் ஒரு கொடூரமான தாக்குதல் என்பது காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் தான் என பல பத்திரிகையாளர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பத்திரிகையாளர் சர்வதேச மையமும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தான் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறை என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குடும்பத்தினரை படுகொலை செய்யும் இஸ்ரேல்
காசா பகுதிக்குள் செயல்படும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, படுகொலை செய்வது மட்டுமின்றி பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. போர் துவங்கியதில் இருந்து பத்திரிகையாளர்களின் வீடுகளின் மீது நேரடி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம்.
அல்-தஹ்தூஹ் என்ற பாலஸ்தீன மூத்த பத்திரிகையாளரின் 7 மற்றும் 15 வயது உள்ளிட்ட 3 குழந்தைகள், அவரது மனைவி என அனைவரையும் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி கொடூரமான முறையில் படுகொலை செய்துவிட்டது. எனினும் பத்திரிகையாளர் அல்-தஹ்தூஹ் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலை செய்திகளை வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களால் இதுவரை 38,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளையே இஸ்ரேல் அதிகம் படுகொலை செய்துள்ளது. மேலும் 87,700 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.