world

img

ஒரே ஆண்டில் 10 கோடி பேர் இடப்பெயர்வு

நியூயார்க், டிச.28- 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் 10 கோடி மக்கள் இடம் பெயர்ந்தனர்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நல உயர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வன்முறை, சச்சரவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த இடம் பெயர்வுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற நெருக்கடிகளை மக்கள் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 2021-ஆம் ஆண்டிலும் இத்தகைய நெருக்கடிகள் இருந்தன. அப்போது 9 கோடி மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இந்த ஆண்டில் நிலைமை மோசமாகியிருப்பதையே இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை காட்டுகிறது.

2022-ஆம் ஆண்டில் அதிக அளவு மக்கள் இடம் பெயர்ந்த நாடுகளின் பட்டியலில் உக்ரைன், ஏமன், எத்தியோப்பியா, பர்க்கினா ஃபாசோ, சிரியா, மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன. ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்குப் பிறகு மட்டுமல்ல, இதற்கு முன்பும் உக்ரைனில் நிலவிய உள்நாட்டுக் குழப்பத்தால் மக்கள் வேறு இடங்களுக்கு மாறினர். சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிரான தீவிரவாதிகளை ஒடுக்கி விட்டாலும், அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகள் இன்னும் இயங்கி வருகின்றனர். இந்த இடப்பெயர்வு குறித்துக் கருத்து தெரிவித்த ஐ.நா. அகதிகள் நல உயர் ஆணையத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி, ‘‘இதுவரைக்கும் இந்த எண்ணிக்கையில் இடப் பெயர்வு ஏற்பட்டதேயில்லை. கடந்த ஆண்டை விட இது பெரிய எண்ணிக்கையாகும். வன்முறைகள் மற்றும் தொடரும் போர்கள் ஆகியவையே இந்த இடப்பெயர்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. சில நாடுகளில் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், உலகம் முழுவதும் இந்த அவலம் நிலவுகிறது’’ என்று தெரிவித்தார். இடம் பெயர்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கியே செல்கின்றனர். அங்கு சென்றால் தங்கள் வருங்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தே அங்கு செல்ல விரும்புகிறார்கள். மக்களின் இந்த உணர்வைத் தவறாகப் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். கடத்தல் வேலைகள் நடக்கின்றன. குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்படுகிறார்கள். மத்தியத் தரைக்கடல் பகுதியைக் கடப்பது எளிதானது இல்லை என்பதால் வேறு வழியில்லாமல் எதற்கும் தயாரான நிலைக்கு மக்கள் மாறுகின்றனர்.

ஏமன்

கடந்தஏழு ஆண்டுகளாக ஏமன் மீது அமெரிக்க ஆதரவுடன் சவூதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள அரசை அகற்றி விட்டுத் தனது ஆதரவு அரசை அமைப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. அந்த எண்ணம் இதுவரையில் நிறைவேறவில்லை. இந்நிலையில் தொடர் தாக்குதல்களால் ஏமன் நாட்டு மக்களே பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அந்நாட்டில் இருந்து இதுவரையில் 43 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.  ஏமனில் உள்ள ஐ.நா.வின் குடியேற்ற அமைப்பு மற்றும் ஐரோப்பிய மனித உரிமை அமைப்பு எக்கோ ஆகியவை தங்களது செயல்பாடுகளை விரிவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இந்த நெருக்கடி குறித்துக் கருத்து தெரிவித்த ஐ.நா. குடியேற்ற அமைப்பின் தலைவர் கிரிஸ்டா ராட்டன்ஸ்டெய்னர், ‘‘ஏமனில் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. உள்நாட்டிலே இடம் பெயர்ந்தவர்கள் நெருக்கடியில் இருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள், தங்கள் வாழ்வின் மீது எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் வாழ்கின்றனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். வரும் குளிர்காலம் இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு பெரும் சவாலாக அமையப் போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நல ஆணையம் எச்சரித்திருக்கிறது.