அகர்தலா, செப். 4 - பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2020இல் பிஷால்கர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றிய 55 வயதான கிருஷ்ண தாஸ் என்ற விதவை பெண். அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கைவிடப்பட்ட கிணற்றில் வீசப்பட்டது. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த பிரிவுகளில் சுமன் தாஸ் (24) மற்றும் அவரது நண்பர் சந்தன் தாஸ் (26) கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு செபாஹிஜாலா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சுமன் தாஸ் தாய் நமீதா தாஸ் தனது மகனுக்கு விசாரணையின் போது மரண தண்டனை வழங்குமாறு நீதிபதி யிடம் கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் கூடுதலாக மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. தனது மகனே குற்றத்தை செய்திருந்தாலும் அவரது தாய் நீதியின் பக்கம் நின்று உண்மையை சாட்சியமாக சொன்னது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.