சாவர்க்கர் அந்தமான் செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவர் அறைக்கு வரும் புல் புல் என்ற பறவையின் மீது ஏறிப் பறந்து இந்தியாவிற்கு தினசரி வந்து போனாராம். இது கர்நாடகாவில் புதிதாக உருவாக்கப்பட்ட எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு பாடம். அந்தமானிலிருந்து அப்பப்ப இந்த புல் புல் பறவை மீது ஏறி பறந்துவந்து தனது பிரிட்டிஷ் எஜமானர்களிடம் மன்னிப்புக் கடிதம் மற்றும் பென்சன் விண்ணப்பம் கொடுத்துவிட்டு, சாவர்க்கர் அந்தமான் திரும்பிவிடுவார் போலும்!
- பிரதமர் மோடி மக்களவைக்கு வந்தே தீரவேண்டும்.. எதிர்க்கட்சியினர் சொல்வதைக் கேட்க வேண்டும்.. அவர்களது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். சொல்லாவிட்டால் அவர் பிரதமர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று புல்புல் அறிவித்துவிடும்!
- நீதிபதிகள் அரசியல் சட்டப்படி தீர்ப்பு சொல்ல வேண்டும். மாறி சுய ஆதாயத்திற்காக தீர்ப்பு சொன்னாலோ மூன்று முறைக்கு மேல் ஒத்திவைத்தாலோ புல்புல் பறவையே தீர்ப்பு சொல்லிவிடும்.
- ஒரு பெண்ணை யாராவது தவறான எண்ணத்தோடு தொட்டால், புல்புல் அவரைச் சிறைக்குக் கொண்டுபோய் அடைத்துவிடும். இனி தவறாக நடக்க மாட்டேன் என்று அவர் அந்தப் பெண்ணின் காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்கும்வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும்.
- ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்று யார் பேசத் தொடங்கினாலும் அவர் பேசுவது யார் காதிலும் கேட்காது.. மாநில உரிமைகள் மீது பிரதமர் கைவைத்தால் அவரது உத்தரவுகள் செல்லாது என்று புல்புல் அறிவித்துவிடும்!
- ஒரு திட்டம் அறிவிக்கப்படும்போது அது இலவசமா, வளர்ச்சித் திட்டமா என்பதை புல்புல் அறிவிக்கும். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் ஒன்றிய அரசு தலையிட்டால் அது பிறப்பிக்கும் ஆணைகள் செல்லாது என்று புல்புல் அறிவிக்கும்.
- தேர்தல் வாக்குறுதிகளை ஆளும் கட்சி அதிகாரத்திற்கு வந்து ஒரு வருடத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மறுதேர்தல் என்று புல்புல் ஆணை பிறப்பித்துவிடும்!
- குற்றம் சுமத்தியவரை சிறைக்குள் தள்ளினால் அவர் நிரபராதியாக இருக்கும் பட்சத்தில் அவருக்காக சிறைக் கதவுகள் திறக்காது. உண்மையான குற்றவாளிகளுக்கு மட்டுமே திறக்கும். நிரபராதிகளைத் தண்டிக்கும் காவல் துறை அதிகாரிகளை புல்புல் சிறைக்குள் தள்ளிவிடும்!
- எந்த நிறுவனமாவது ஒரு ஊழியரை நிரந்தர அடிப்படையில் அல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தால் முதலாளியின் தலை மீது குட்டு விழுந்துகொண்டே இருக்கும். நிரந்தரப் பணி என்று அவர் அறிவிக்கும் வரை குட்டு நிற்காது. ஒன்றிய அரசு நிறுவனமாக இருந்தால் பிரதமர் மீது; மாநில நிறுவனமாக இருந்தால் முதல்வர் மீது இந்தத் தண்டனை விதிக்கப்படும்!
- எல்லா மாநிலங்களிலும் சாதிக் கணக்கெடுப்பை புல்புல் பறவையே எடுத்து அதன்படி கல்வி, வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
- மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டமன்றங்கள், ஊராட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அப்படி வழங்காவிடில் அந்தத் தேர்தல் செல்லாது.
- பெரும் பணக்காரர்கள் மீது அவர்கள் வருமானத்தில் 50 சதம் வரி, நிர்வாகச் செலவு 40 சதம், மீதி 10 சதம் முதலாளிக்கு என நிர்ணயிக்கப்படும்.
- பிரதமர் ஒரு முறை பொய் சொன்னால் அவரை புல்புல் பறவை 1000 கி.மீ. தள்ளி ஒரு இடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இரண்டு முறை பொய் சொன்னால் 2000 கி.மீ., மூன்று முறை பொய் சொன்னால் 3000 கி.மீ. .., என்று தூரம் அதிகரித்துக் கொண்டே வரும். அவர் திருந்தவில்லையெனில் கடைசியில் மக்கள் கண்களில் இருந்து காணாமலே போய்விடுவார்!
- ராஜகுரு